திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், அச்சரப்பாக்கம் சாலை பஜார் வீதியில் 40க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் இயங்கி வந்தன.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டியதன் அவசியம் கருதி காய்கறி மார்க்கெட்டை புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்ற நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதனடிப்படையில், காவல்துறையும் வருவாய்த் துறையும் ஒருங்கிணைந்து எடுத்த முடிவின்படி வந்தவாசி புதிய பேருந்து நிலையத்தில் 40க்கும் மேற்பட்ட காய்கறிக் கடைகள் செயல்படத் தொடங்கியது.
இதனைப் பார்வையிட்ட தாசில்தார் நரேந்திரன், நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, டிஎஸ்பி தங்கராமன் உள்ளிட்டோர் காய்கறி வாங்க வருபவர்களை சமூக பாதுகாப்பு வேண்டியும் தனித் தனியாக நின்று காய்கறிகளை வாங்குமாறு வலியுறுத்தினர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் காய்கறி வாங்க வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வரவேண்டும் அறிவுறுத்தினர். முகக் கவசம் அணிந்து வராதவர்களுக்கு காய்கறிகளை விற்பனை செய்யக்கூடாது என எச்சரிக்கப்பட்டது.
காவல்துறையின் அறிவுறையின்படி அனைவரும் தனித் தனியாக விலகி நின்று காய்கறிகளை வாங்கி சென்றனர்.
இதையும் படிங்க: விற்பனை ஆகாத பாலை கழிவு நீரோடையில் ஊற்றும் அவலம்!