ETV Bharat / state

பொதுமக்களை ஏமாற்றி நிலங்களை அபகரித்த கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர்

author img

By

Published : Oct 12, 2020, 10:38 PM IST

திருவண்ணாமலை: பொது மக்களின் பல ஏக்கர் நிலங்களை ஏமாற்றி அபகரித்து வருவதாக கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆட்சியரிடம் மனு
ஆட்சியரிடம் மனு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் பிஎல் தண்டா கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளராக பணிபுரிபவர் குப்பன். இவர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லம்பாடி இனத்தைச் சேர்ந்த மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த ஊரில் வசித்துவரும் லம்பாடி இனத்தைச் சேர்ந்த மக்களின் 15 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தை அவர் பெயருக்கு மாற்றியும் அரசின் சொத்துக்களையும் கட்டடங்களையும் அவருடைய பெயருக்கு மாற்றி பட்டா எழுதிக் கொண்டதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஊரில் உள்ள குடிநீர் டேங்க், போர்வெல், முதலமைச்சரின் தொலைக்காட்சி பெட்டி கட்டடம், ஏராளமான தரிசு நிலங்களை அபகரித்து வைத்துள்ளார். அவற்றில் பல ஏக்கர் நிலங்களை விற்பனை செய்துள்ளார்.

முதியோரிடம் பென்சன் வாங்கி தருவதாக 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று கமிஷன், வாரிசு சான்று, இறப்பு சான்று என்று பல்வேறு சான்றுகள் வழங்குவதற்கு என லஞ்சம் வாங்குவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை நடத்த வேண்டும். அரசு இடம், ஊர் பொது மக்களின் சொத்து, மிரட்டி பெறப்பட்ட பணம், ஆகியவற்றை திரும்பப் பெறக் கோரியும் கிராம நிர்வாக அலுவலர் உதவியாளர் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றும் புகார் மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

தங்களின் மனுவுக்கு உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் லம்பாடி இன மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.