ETV Bharat / state

அருணாச்சலேஸ்வரர் கோயில் தேர் திருவிழா குறித்து நாளை அறிவிப்பு!

author img

By

Published : Nov 11, 2020, 2:38 PM IST

திருவண்ணாமலை : அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா, தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளை (நவம் 12) இறுதி முடிவெடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றம்
மெட்ராஸ் உயர் நீதிமன்றம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, தேர் திருவிழாவை நடத்த தமிழ்நாடு அரசு, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிடக் கோரி விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் வட தமிழகத் துணைத் தலைவர் வி.சக்திவேல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், ”வழக்கமாக நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றம் நடத்தி, 17 நாட்கள் நடைபெறும். இந்த முறைப்படி தீபத்திருவிழா, தேர்த்திருவிழா நடத்த வேண்டும். இதுகுறித்து நவம்பர் 7ஆம் தேதி மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது”என்றார்.

பக்தர்களை அனுமதிக்காமல் கோவில் நிகழ்வுகளை நடத்தலாம், கோவில் வளாகம் மட்டுமல்லாமல் மாட வீதிகளிலும் தேர் திருவிழாவை நடத்த உத்தரவிட வேண்டும். அரசு உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு பூரி ஜெகன்நாதர் கோவில் தேர் திருவிழா நடத்தியது போல அண்ணாமலையார் கோயில் விழாக்களையும் நடத்த வேண்டும் என மனுதாரர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள், மாவட்ட நிர்வாகம் பிற ஊர்களிலிருந்து வரும் பக்தர்களை கட்டுபடுத்தலாமே தவிர, திருவண்ணாமலையில் உள்ள உள்ளூர் மக்களை எப்படி கட்டுப்படுத்த முடியும் எனக் கேள்வி எழுப்பினர். மக்களை கட்டுப்படுத்துவதற்காக மனுதாரர் தரப்பு என்ன நடவடிக்கை எடுத்தது எனவும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள் எல்லாவற்றையுமே காவல் துறை கட்டுப்படுத்த வேண்டுமென நினைக்க கூடாது எனச் சுட்டிக்காட்டினர்.

அரசு சார்பில் ஆஜரான பிளீடர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், அக்டோபர் 30ஆம் தேதி பிறப்பித்த அரசாணையில் கோயில் நடைமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளதால், அதன்படி கோயில் விழாவை எப்படி நடத்த வேண்டுமென கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

அண்ணாமலையார் கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம், வழக்கமாக 17 நாள்கள் விழாவில் நாளொன்றுக்கு 1 லட்சம் பேரும், தேர் திருவிழாவில் 5 லட்சம் பேரும், மகா தீபத்தன்று 20 முதல் 25 லட்சம் பக்தர்கள் வரை கலந்து கொள்வார்கள் எனவும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

இந்தாண்டு கரோனா கட்டுப்பாடுகள், தளர்வுகளை கருத்தில் கொண்டு பூஜைகள் அனைத்தும் முறையாக நடத்தப்படும், தேர்த் திருவிழாவில் பக்தர்களை அனுமதிக்காமல் உற்சவரை வைத்து கோவிலுக்குள் மட்டுமே நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தீபத்திருவிழா எப்படி நடத்துவது என்பது குறித்து கோயில் நிர்வாகம், இந்துசமய அறநிலையத்துறை, தமிழ்நாடு அரசு, காவல் துறை, மாவட்ட நிர்வாகம் ஆகியவற்றுடன் இன்று (நவம் 11) கூட்டம் நடத்தப்படுகிறது, நாளைக்குள் (நவம் 12) இறுதி முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தீபத் திருவிழா, தேர் திருவிழா குறித்து கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிவிக்க கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆசியாவிலேயே மிகப்பெரிய திருவாரூர் ஆழித்தேரோட்டம் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.