சென்னை திருவொற்றியூர் பகுதியில் வசிப்பவர் வேலு. யோகா மையம் நடத்திவரும் இவர், தன்னுடைய மாணவர்கள் 10 பேரை அழைத்துக்கொண்டு, பழவேற்காட்டில் உள்ள திருமலை நகர் மீனவக் கிராமத்தில உள்ள அவரது உறவினர் வீட்டிற்குச் சென்றார்.
அங்கிருந்து கடலில் குளிப்பதற்காக கண்ணன் என்பவருக்குச் சொந்தமான படகைப் பெற்று, மாணவர்களுடன் முகத்துவாரம் அருகே குளிக்கச் சென்றார். அப்போது நவீன் என்ற மாணவர் அலையில் சிக்கினார்.
இதையறிந்த யோகா பயிற்சியாளர் வேலு, கடலில் குதித்து மாணவரை காப்பாற்ற முயன்றார். அலையின் வேகத்தால், பயிற்சியாளரும் அடித்து செல்லப்பட்டார். இதைக் கண்ட படகு உரிமையாளர் கண்ணன், கடலில் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றார்.
அடித்து செல்லப்பட்டவர்களில் நவீன் என்ற மாணவரை மட்டும் கண்ணன் மீட்டார். ஆனால், அலையில் சிக்கிய பயிற்சியாளரை காப்பாற்ற முடியவில்லை. உடனே படகில் சென்று பயிற்சியாளர் வேலுவை மீட்டு, பழவேற்காடு அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அறிவுறுத்தினர். அங்கு பயிற்சியாளரைப் பரிசோதித்த பொன்னேரி அரசு மருத்துமனை மருத்துவர்கள், வேலு இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக திருப்பாலைவனம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். இருவரை காப்பாற்ற முயன்ற படகின் உரிமையாளர் கண்ணனும் ஆபத்தான சூழலில் சிகிச்சைக்காக, சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இந்நிகழ்வு தொடர்பாக, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க... விவசாயிகளுக்கு ஆதரவாக மீனவர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்!