ETV Bharat / state

வெள்ள நிவாரணம் வழங்குவதில் தகராறு! ரேசன் கடை ஊழியருக்கு வெட்டு! விபரீதத்திற்கு என்ன காரணம்?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 7:37 AM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணத் தொகை 6000 ரூபாய் வழங்குவதில் ஏற்பட்ட தகராறில் ரேஷன் கடை விற்பனையாளரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் 6000 வழங்குவதில் குளறுபடி
திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ள நிவாரணம் 6000 வழங்குவதில் குளறுபடி

திருவள்ளூர்: ஊத்துக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட எல்லாபுரம் பகுதியில் சுமார் 119 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரியப்பாக்கம் பகுதிநேர நியாய விலைக் கடை மூலம் அரசு அறிவித்த 6000 ரூபாய் வெள்ள நிவாரணத் தொகை கடந்த இரண்டு நாட்களாக வழங்கப்பட்டு வருகிறது.

100க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்ட நிலையில், எல்லாபுரம் அருந்ததி நகரைச் சேர்ந்த முருகன் (வயது 37) என்பவருக்கு சிக்னல் கோளாறு காரணமாக கைரேகை வைப்பதில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கல் நீடித்து வந்ததாக கூறப்படுகிறது. இயந்திரம் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த முருகன், விற்பனையாளர் ராஜேந்திரனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது விற்பனையாளர் ராஜேந்திரனின் கை, கழுத்து மற்றும் முகத்தில் வெட்டிவிட்டு முருகன் தப்பியோடியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரேஷன் கடை விற்பனையாளரை அப்பகுதி மக்கள் மீட்டு முதலுதவிக்காக பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் பெரியபாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பி ஓடிய முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. முதலமைச்சருடன் மத்திய குழு இன்று ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.