திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயில் எதிரே உள்ள பச்சரிசி மலை மிகவும் பழமையான மலை ஆகும். இந்த மலையில் கார்த்திகை தினத்தில் திருத்தணி முருகன் கோயிலில் 'மகா அகண்ட தீபம்' ஏற்றப்படுவது வழக்கம். இந்த மலையானது 500 அடி உயரம் கொண்டதாகும். இந்நிலையில், இந்த மலையின் அருகேயுள்ள ஒரு மரத்தில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பிணமாக அழுகிய நிலையில் தூக்கில் தொங்கிக் கிடந்தார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக திருத்தணி காவல் துறைக்குத் தகவலளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மரத்தில் அழுகிய நிலையில் இருப்பது ஆண் சடலம் என உறுதி செய்தனர். பின்னர் திருத்தணி தீயணைப்புத் துறைக்குத் தகவலளிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் மலை உச்சியின் 20 அடி உயரத்தில் உள்ள மரத்தில் தொங்கிய சடலத்தைக் கயிறு கட்டி, மேலே ஏறி லாவகமாக இறக்கினார்.
சடலத்தைக் கைப்பற்றிய காவல் துறை, திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தது. இதனைத்தொடர்ந்து தூக்கில் பிணமாக தொங்கிய நபர் குறித்து திருத்தணி காவல் துறை தரப்பில் கூறுகையில், ’இறந்த நபருக்கு ஒரு 50 வயது இருக்கும். இவர் கட்டம் போட்ட ப்ளூ கலர் லுங்கி அணிந்துள்ளார். இவரது முகம், உடல் அனைத்தும் அழுகிய நிலையில் இருப்பதால் அடையாளம் காணமுடியவில்லை.
திருத்தணி சுற்றுவட்டாரப் பகுதிகளில் எந்த ஆணும் காணவில்லை என்று காவல் நிலையத்தில் புகார் எதுவும் பதிவாகவில்லை. இந்த நபர் யார்? இவர் தூக்கில் பிணமாகத் தொங்கினாரா அல்லது யாராவது கொலை செய்து தூக்கில் தொங்க வைத்து விட்டார்களா?' என்ற கோணங்களில் விசாரித்து வருவதாகத் தெரிவித்தனர். இந்த நபர் தூக்கில் தொங்கி, சுமார் ஐந்து தினங்கள் இருக்கும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜேஎன்யூ தாக்குதலுக்கு காரணம் பாஜக - மக்களவை உறுப்பினர் டி. ஆர். பாலு குற்றச்சாட்டு