ETV Bharat / state

சாதிய தாக்குதல்களைப் பெரிதுபடுத்தாதீர்கள் - அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் வேண்டுகோள்..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 3, 2023, 5:57 PM IST

Speaker Appavu: திருநெல்வேலி மாவட்டத்தில் சாதிய தாக்குதலுக்கு ஆளான பட்டியலின இளைஞர்களை மருத்துவமனைக்குச் சென்று தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

சாதிய தாக்குதல்களை பெரிது படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் வேண்டுகோள்
சாதிய தாக்குதல்களை பெரிது படுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் வேண்டுகோள்

சாதிய தாக்குதல்களைப் பெரிதுபடுத்த வேண்டாம் என அரசியல் கட்சிகளுக்கு சபாநாயகர் வேண்டுகோள்

திருநெல்வேலி: நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் தாமிரபரணி நதிக்கரையில் குளித்துவிட்டு வந்த இரண்டு இளைஞர்களிடம், போதை கும்பல் ஒன்று தகாத முறையில் நடந்து கொண்டு சாதியைக் கேட்டுத் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பேரும் படுகாயம் அடைந்த நிலையில், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை தச்சநல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

பின்னர் மருத்துவர்களிடம் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை தொடர்பாகவும் கேட்டறிந்தார். அதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, “நெல்லை மணிமூர்த்தீஸ்வரத்தில் நடந்த சம்பவம் குறித்து காவல்துறையின் கவனத்திற்குச் சென்றவுடன், ஆறு பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

தவறு யார் செய்தாலும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் அவர்களுக்குத் தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கைகள், தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். அரசியல் கட்சிகள் இது போன்ற சம்பவங்களைப் பெரிதுபடுத்தாமல், அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, பாதுகாப்போடு இந்த சமூகம் எந்தவித மோதலும் இல்லாமல் வாழ்வதற்கு ஒத்துழைக்க வேண்டும்.

மணிமூர்த்தீஸ்வரம் சம்பவம் போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களின் பெற்றோர்கள், அவர்களுக்கு நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும். போதை வஸ்துக்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதற்கும் பெற்றோர்கள் நல்ல அறிவுரைகளை வழங்க வேண்டும்.

மணிமூர்த்தீஸ்வரம் உள்ளிட்ட சம்பவங்களைப் போன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறித்து, மாவட்ட நிர்வாகம், காவல்துறைக்குத் தகவல் தெரிய வந்தால், உடனடியாக நிறை, குறைகள் தொடர்பாக ஆய்வு செய்து பொதுமக்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பதற்கு, தமிழக முதலமைச்சர் அனைத்து வழிகாட்டுதல்களையும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு வழங்கி உள்ளார்.

பொதுமக்கள் தைரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க வேண்டும். இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, உச்சபட்ச தண்டனை என்னவோ அதனை வழங்குவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார். தேர்தல் நெருங்கி வருவதால் மத்தியில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக, பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் வருமானவரித்துறை போன்ற சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

முடிந்த அளவிற்கு ஆளுநர் ஆட்சியில் இருப்பவர்களுக்கு இடையூறுகளைச் செய்து வருகிறார்” எனத் தெரிவித்தார். இதனிடையே பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங்கப்படும் முதற்கட்ட நிதியாக ரூ.62 ஆயிரத்தை, பாதிக்கப்பட்ட இருவருக்கும் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

இதையும் படிங்க: கரும்பு விவசாயிகளுக்கு தித்திப்பான அறிவிப்பு..! கூடுதல் ஊக்கத்தொகை வழங்க 253.70 கோடி நிதி ஒதுக்கீடு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.