ETV Bharat / state

திருநெல்வேலியில் வாக்குப்பதிவு குறைவு ஏன்? மாவட்ட ஆட்சியர் விளக்கம்

author img

By

Published : Apr 7, 2021, 6:16 PM IST

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், ஸ்ட்ராங் அறையில் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்பு
திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று (ஏப்.6) நடைபெற்று முடிந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் மொத்தம் 66.54 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

அதாவது மொத்தமுள்ள 13 லட்சத்து 58 ஆயிரத்து 148 பேரில் 9,03,770 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். இதனால், சென்னைக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டத்தில் குறைவான வாக்குப்பதிவு ஏற்பட்டது.

இந்நிலையில், மொத்தமுள்ள 1,924 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளைக் கொண்ட வாக்குப்பெட்டிகள், வாக்கு எண்ணும் மையமான திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரிக்கு காவலர்கள் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், பூத் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

திருநெல்வேலி வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு காவலர்கள் பாதுகாப்பு

ஐந்து தொகுதிகளுக்கான வாக்குப் பெட்டிகள் அடங்கிய அறையை அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னின்று சீல் வைத்தனர். அப்போது, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகர காவல் ஆணையர் அன்பு, தேர்தல் பார்வையாளர்கள் சீல் வைக்கும் பணிகளை கண்காணித்தனர்.

வாக்கு எண்ணும் மையத்தைச் சுற்றி 156 சிசிடிவி கேமராக்கள் அமைத்து தரைத்தளத்தில் உள்ள கட்டுபாட்டு அறையில், காவலர்கள் 24 மணி நேரம் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மையத்தை சுற்றிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன.

அதன்படி வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினர், கீழ் தளத்தில் தமிழ்நாடு சிறப்பு காவலர்கள், மையத்தின் நுழைவு வாயிலில் தமிழ்நாடு ரிசர்வ் காவலர்கள் என மொத்தம் 450 காவலர்கள் 24 மணி நேரம் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணி மேற்கொள்கின்றனர்.
நெல்லையில் குறைவான வாக்குப்பதிவு ஏன்?
கோடை வெயில் மற்றும் கரோனா அச்சம் காரணமாக நெல்லை மாவட்டத்தில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விளக்கமளித்தார். அதாவது வாக்கு எண்ணும் மையத்தில் சீல் வைக்கும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் விஷ்ணு பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "நெல்லை மாவட்டத்தில் ஐந்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் சேர்த்து, மொத்தமாக 66.54 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தமாக 9 லட்சத்து 03 ஆயிரத்து 770 பேர் தேர்தலில் வாக்களித்துள்ளனர். வாக்கு எண்ணும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடந்துள்ளது. சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்கண்காணிப்புப் பணி நடைபெறும். துணை ராணுவ படையினர், தமிழ்நாடு ஆயுதப்படை காவலர்கள், உள்ளூர் காவலர்கள் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த தேர்தல்களை பார்க்கும்போது, வழக்கமாக 65 முதல் 70 சதவிகித வாக்குகள்தான் பதிவாகும். இந்த முறையும் அதேபோல தான் வாக்குகள் பதிவாகியுள்ளது. பாதுகாக்கப்பட்ட அறையிலிருந்து பதிவு செய்யக்கூடிய காட்சிகளை அனைத்துக் கட்சியினரும் பார்க்கும் வகையில் பெரிய திரைகள் கொண்டு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.

பாதுகாக்கப்பட்ட அறை, வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை தேர்தல் நடத்தும் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு வரை மூலமும் வேட்பாளர்கள், முகவர்கள் பார்வையிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.