ETV Bharat / state

பாஜக பிரமுகர் சரமாரியாக வெட்டி கொலை.. நெல்லையில் தொடரும் படுகொலைகள்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 31, 2023, 7:27 AM IST

BJP person murder case: திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ஜெகன்
கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் ஜெகன்

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன். இவர் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வந்தார். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி பொதுச் செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். வழக்கமான பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் ஜெகன் வந்துள்ளார். அப்போது அவரது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்த பாளையங்கால்வாய் அருகே நின்று கொண்டிருந்தார்.

இந்த சூழலில் அங்கு திடீரென வந்த மர்ம நபர்கள் ஜெகனை சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஜெகன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். ஜெகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து மாநகர காவல்துறை ஆணையாளர் பிரவேஷ்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். அதன் பின் இறந்த ஜெகனின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கொலைக்கான காரணம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளும் பணியும் போலீசாரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த நபர்களிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டுமில்லாமல் மோப்ப நாய் மூலம் கொலையாளியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாளையங்கோட்டை பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெகன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற பதிவேடு பட்டியலிலும் ஜெகன் பெயர் உள்ளது.

இந்த கொலை முன்விராதத்தின் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லையில் கடந்த இரண்டு மாதத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வெட்டி கொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: வாங்கிய கடனுக்கு வட்டி கட்டாத நபரை கடத்திச் சென்று தாக்குதல்? - கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட நபரால் பரபரப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.