ETV Bharat / state

துப்பாக்கி பயிற்சி விவகாரம்: நெல்லையில் தப்பியோடிய ரவுடியை டெல்லி போலீசார் தூக்கியது எப்படி?

author img

By

Published : Apr 18, 2023, 5:50 PM IST

Nellai Gun Practise issue: இளைஞருக்கு துப்பாக்கி பயிற்சி கொடுத்த பிரபல குற்றவாளியும் நெல்லை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடியவருமான பிரபல ரவுடி வெள்ளை சுந்தரை டெல்லியில் போலீசார் கைது செய்த நிலையில், டெல்லிக்கு நெல்லை மாவட்ட தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

Nellai Gun Practise issue: நெல்லை: இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சியளித்த விவகாரத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், போலீசாரிடம் சரணடைந்த பிரபல ரவுடி வெள்ளை சுந்தர் நெல்லை நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடினார். இந்நிலையில், அவரை டெல்லியில் கைது செய்த நிலையில், தமிழ்நாட்டிலிருந்து தனிப்படை போலீசார் டெல்லிக்கு விரைந்துள்ளனர். விரைவில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நெல்லை மகாராஜா நகரைச் சேர்ந்தவர், வெள்ளை சுந்தர். தென் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ராக்கெட் ராஜாவின் கூட்டாளியாக வெள்ளை சுந்தர் இருப்பதாகவும், இவர் மீது சென்னை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வெள்ளை சுந்தர் தனது உறவினரான அஜய் கோபி என்ற இளைஞருக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது.

போலீசாரின் விசாரணையில் அந்த வீடியோ பல ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டது என்பது தெரியவந்த போதிலும், பழைய வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் பரவ விட்டு பொதுமக்கள் மத்தியில் ஆயுத கலாசாரத்தை தூண்டியதாக நெல்லை பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அஜய் கோபியை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த வெள்ளை சுந்தர் தலைமறைவாகியதாக கூறப்பட்ட நிலையில், கடந்த மாதம் 24ஆம் தேதி அவர் நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைய வந்தார். அப்போது, வெள்ளை சுந்தர் கடும் போலீசாரின் பாதுகாப்பை மீறி நீதிமன்றத்தில் இருந்து திடீரென தப்பி ஓடிய சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

மேலும், நூற்றுக்கணக்கான போலீசார் நடமாடும் நீதிமன்ற வளாகத்தில் முக்கிய வழக்கின் குற்றவாளி சாதாரணமாக தப்பிச் சென்ற சம்பவம் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியது. இந்த நிலையில், பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வாசிவம் தான், குற்றவாளி வெள்ளை சுந்தரை தப்பவிட்டதாக கூறப்பட்டது.

எனவே, பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் வாசிவத்தை கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அதிரடி உத்தரவிட்டார். மேலும், தப்பி ஓடிய வெள்ளை சுந்தரை பிடிக்க தச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் திருப்பதி தலைமையில் நான்கு பேர் கொண்ட தனிப்படையை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் அமைத்தார். தனிப்படை போலீசார் கடந்த சில நாட்களாக வெள்ளை சுந்தர் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த நபர்களை ரகசியமாக கண்காணித்து வந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடி வந்த நிலையில், அவர் வெளி மாநிலத்தில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதற்கிடையில் அவர் பயன்படுத்தி வந்த செல்போன் நம்பரை கைப்பற்றிய போலீசார் சைபர் கிரைம் போலீசார் மூலம் அந்த செல்போன் எண்ணை கண்காணித்தனர். அதில், தலைநகர் டெல்லி பகுதியில் வெள்ளை சுந்தரின் செல்போன் இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லி போலீசாருக்கு முறைப்படி தகவல் தெரிவித்து வெள்ளை சுந்தரை பிடித்து தரும்படி மாநகர காவல்துறை கூறியுள்ளனர். அதன்படி, டெல்லி போலீசார் இன்று (ஏப்.18) வெள்ளை சுந்தரை சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.

இதையடுத்து நெல்லையிலிருந்து ஆய்வாளர் திருப்பதி தலைமையான தனிப்படை போலீசார் டெல்லியில் கைது செய்யப்பட்ட வெள்ளை சுந்தரை நெல்லைக்கு கொண்டு வருவதற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர். இதைத்தொடர்ந்து டெல்லி நீதிமன்றத்தில் முறைப்படி வெள்ளை சுந்தரை முறையாக ஆஜர்படுத்தி விட்டு, நாளை அவரை நெல்லைக்கு அழைத்து வர இருக்கின்றனர். நெல்லையில் நீதிமன்றத்தில் சரணடைய வந்த குற்றவாளி தப்பி ஓடிய நிலையில், அவரை டெல்லி போலீசார் டெல்லியில் கைது செய்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'ஜெய்பீம்' பட பாணியில் மீண்டும் ஓர் கொடூரம்.. கண்ணீர் வடிக்கும் இருளர் இன மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.