ETV Bharat / state

கூடங்குளம்; மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் பின்னடைவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 10:36 PM IST

kudankulam nuclear power plant: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் சிக்கி உள்ள மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், மிதவைக் கப்பலை மீட்க சில நாட்கள் ஆகலாம் எனவும் வல்லுநர் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

kudankulam nuclear power plant
கூடங்குளம் அணுமின் நிலையம்

கூடங்குளம் அணுமின் நிலையம்

திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 5வது மற்றும் 6வது அணு உலைகள் கட்டுமானப் பணிகள் சுமார் 49 ஆயிரத்து 621 கோடி ரூபாயில் நடைபெற்று வருகிறது. வருகிற 2027ஆம் ஆண்டுக்குள் இதன் கட்டுமானப் பணிகள் முடிவடைந்து மின் உற்பத்திகள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்ய போரின் காரணமாக இந்த அணு உலைகளுக்கு வரவேண்டிய உதிரி பாகங்கள் வருவதில் அதிக காலதாமதம் ஏற்பட்டது. இதனால் இதன் திட்ட காலம் மேலும் சில ஆண்டுகள் ஆகும் எனவும், 2030-இல்தான் மின் உற்பத்தி தொடங்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சூழ்நிலையில், கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இழுவைக் கப்பல் மூலமாக 5வது மற்றும் 6வது அணு உலைகளுக்கான தலா 300 டன் எடை கொண்ட 2 ஸ்டீம் ஜெனரேட்டர்கள் கடல் மார்க்கமாக எடுத்து வரப்பட்டன.

கூடங்குளம் அணுமின் நிலைய சிறிய துறைமுக நுழைவுப் பகுதியில் வரும் பொழுது ஜெனரேட்டர்கள் எடுத்து வந்த இழுவைக் கப்பலின் பின்னால் இழுத்து வரப்பட்ட பார்ஜி எனப்படும் மிதவைக் கப்பல், பாறை இடுக்கில் சிக்கியதினால் இழுவைக் கப்பலில் உள்ள உலகத்திலான கயிறு அறுந்து விட்டது. அப்பொழுது அடித்த கடல் அலையின் காரணமாக மிதவைப் படகின் ஒரு பகுதியானது அருகில் இருந்த பாறையின் ஒரு பகுதியில் அமர்ந்து சரிந்த நிலையில் காணப்பட்டது.

இதனை மீட்கும் பணிகள் தொடர்ந்து இரு நாட்களாக நடைபெற்றது. இதற்காக சென்னை துறைமுகப் பகுதியில் இருந்து இன்று (செப்.10) காலை வல்லுநர் குழுவினர் வந்து ஆராய்ந்து, மூன்று பரிந்துரைகளை செய்தனர். அதன்பின் மும்பை துறைமுகத்தைச் சார்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் வரவழைக்கப்பட்டு படகை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மிதவைப்படகு பாறையில் மோதியதினால் மூன்று இடங்களில் சேதம் அடைந்துள்ளதாகவும், அதனை கடலுக்குள் மூழ்கி வெல்டிங் செய்யும் பணிகளை மும்பை துறைமுக தொழில்நுட்பக் குழுவினர் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மிதவைக் கப்பலின் உள்ளே தண்ணீர் அடைக்கப்பட்டு சாய்ந்த நிலையில் இருந்த மிதவைக் கப்பலை சமன் செய்த பணிகள் முடிவடைந்தன.

உடனடியாக இழுவைக் கப்பலைக் கொண்டு அதனை மீட்கும் பணிகள் மாலை 3 மணி அளவில் தொடங்கின. ஆனாலும், மிதவைக் கப்பலின் ஒரு பகுதி பாறையின் மேல் அமர்ந்திருந்ததினால், இழுவைக் கப்பலால் அதனை இழுக்க முடியாமல் மீண்டும் உலோகக் கயிறு அறுந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனால் மாலை 4 மணி முதல் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அதிக விசை கொண்ட இழுவைக் கப்பல்கள் மும்பை அல்லது கொச்சின் துறைமுகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட பின்னர்தான் இந்த மீட்புப் பணிகள் இனி தொடங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்திய அனுமின் உற்பத்திக் கழக விஞ்ஞானிகளும், கூடங்குளத்தில் தங்கியிருக்கும் ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகம் எனப்படும் ஆட்டம்ஸ்ட்ராய் (Atomstroy) நிறுவனத்தின் ரஷ்ய விஞ்ஞானிகளும் மிதவைக் கப்பலில் உள்ள நீராவி உற்பத்திக் கலனை ஆய்வு செய்தனர். ஸ்டீம் ஜெனரேட்டர் எனப்படும் நீராவி உற்பத்திக் கலனில் எந்தவித பாதிப்பும் இல்லை என அணுமின் நிலைய உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு ‘சைரன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.