ETV Bharat / state

கல்லறை தோட்டத்தில் இளைஞர் கொலை: போலீஸ் விசரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Jun 7, 2023, 12:40 PM IST

கல்லறை தோட்டத்தில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு பழிக்கு பலியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

police investigation
கல்லறை தோட்டத்தில் இளைஞர் கொலை

திருநெல்வேலி: நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள துதியின் கோட்டை தேவாலயத்தின் பின்புறம் இருக்கும் கல்லறைத் தோட்டத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இருப்பதாக மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் பார்த்தபோது வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் கொலையான வாலிபர் யார் என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, அந்த கொலை சம்பவத்தில் உயிரிழந்த வாலிபர் நெல்லை கே.டி.சி நகர் பகுதியைச் சேர்ந்த ஜோஸ் செல்வராஜ் என்பது தெரியவந்தது.

அதன் பின்னர், மேலப்பாளையம் போலீசார் அவர் தொடர்பான விசாரணையைத் துரிதப்படுத்தினர். இந்த நிலையில், போலீசாருக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. அதாவது, பாளையங்கோட்டை பகுதியைச் சேர்ந்த முத்துஹரி என்பவரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இறந்த இளைஞர் இருப்பது தெரியவந்தது.

அந்த கொலை வழக்கில் ஜோஸ் உட்பட கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் இந்த கல்லறைத் தோட்டத்தில் மது அருந்த வந்ததாகவும், அப்போது இவர்கள் தனிமையில் இருப்பதால் யாரேனும் பழிவாங்கும் நோக்கத்தில் இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் மாநகர காவல் துணை ஆணையாளர் அனிதா நேரில் ஆய்வு நடத்தினார். மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் யார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தி உடனடியாக பிடிக்கவும் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், போலீசார் அவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். தற்போது திருநெல்வேலி மற்றும் நாகர்கோவில் நெடுஞ்சாலையில் மக்கள் போக்குவரத்து அதிகம் இருக்கும் பகுதியில் அமைந்திருக்கும் இந்த கல்லறைத் தோட்டத்தில் நடந்த இக்கொடூர கொலை சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அரசு பேருந்துகளில் சீட் முன்பதிவு அதிகரிப்பு.. அமைச்சர் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.