ETV Bharat / state

நெல்லையில் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவு!

author img

By

Published : Jan 15, 2021, 11:40 AM IST

திருநெல்வேலி: மாவட்டம் முழுவதும் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

nellai-recorded-330-mm-of-rainfall-in-the-last-15-days
nellai-recorded-330-mm-of-rainfall-in-the-last-15-days

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் வழக்கத்துக்கு மாறாக ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுவருகிறது. அதாவது தமிழ் மாதத்தை எடுத்துக் கொண்டால் பெரும்பாலும் மார்கழி மாதம் அதிக பனிப்பொழிவு மட்டுமே இருக்கும். சில நேரங்களில் மட்டும் லேசான மழை பெய்வது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு நெல்லை மாவட்டத்தில் மார்கழி மாதம் அதிக பனிப்பொழிவு இல்லாமல் இருந்தது. அதே சமயம் இரண்டாவது வாரத்திலிருந்து மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தினமும் மாலை வேளைகளில் மட்டும் மிதமான மழை பெய்த நிலையில், ஜனவரி மாத தொடக்கத்திலிருந்து கனமழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கடந்த 10ஆம் தேதி அதிகாலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் மாவட்டத்தின் பிரதான அணையான மணிமுத்தாறு, பாபநாசம், சேர்வலாறு, கடனா, கொடுமுடியாறு உள்ளிட்ட 10 அணைகளும் நிரம்பின. மேலும் அண்டை மாவட்டமான தென்காசியில் உள்ள அணைகளும் நிரம்பின. இந்த அணைகளிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அனைத்தும் தாமிரபரணி ஆற்றை மையமாகக் கொண்டு மூன்று மாவட்டங்களை கடந்து வங்கக்கடலில் கலக்கிறது.

வழக்கமாக மேற்கண்ட அணைகளிலிருந்து 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டாலே கரையோரப் பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும். இச்சூழ்நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் கனமழையால் கடந்த நான்கு தினங்களாக அணைகளில் இருந்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஜனவரி 12ஆம் தேதி அதிகபட்சம் 52 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து ஜனவரி 13ஆம் தேதி நள்ளிரவு அதிகபட்சமாக 60 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. தற்போது மழை அளவு ஒரளவு குறைந்து வந்தாலும் கூட தொடர்ந்து அணைகளிலிருந்து சராசரியாக இருபதாயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் தாமிரபரணி ஆற்றில் 7ஆவது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த சூழ்நிலையில் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மாவட்டம் முழுதும் சராசரியாக 330 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வெறும் 6 மில்லி மீட்டர் மழை மட்டுமே நெல்லை மாவட்டத்தில் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நெல்லையில் கடந்த 15 நாள்களில் 330 மில்லி மீட்டர் மழை பதிவு

கடந்த 15 நாட்களில் அதிகபட்சம் பாபநாசம் பகுதியில் 690 மில்லி மீட்டர் மழையும், மணிமுத்தாறு பகுதியில் 602 மில்லி மீட்டர் மழையும், அம்பாசமுத்திரம் பகுதியில் 412 மில்லி மீட்டர் மழையும், சேரன்மகாதேவி பகுதியில் 278 மில்லி மீட்டர் மழையும், நெல்லை மாநகர் பகுதிகளில் 164 மில்லி மீட்டர் மழையும், நாங்குநேரி பகுதியில் 152 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு ஜனவரி மாதம் அதிக மழைப்பொழிவு இருப்பதாகவும், 1992ஆம் ஆண்டிற்கு பிறகு பெரும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருந்தார்.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை போதியளவு கை கொடுக்கவில்லை என்பதால் தற்போது பெய்து வரும் கனமழை குடிநீர் மற்றும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேசமயம் வழக்கத்துக்கு மாறாக பெய்து வருவதால் நெல்லை மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கர் விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மிதமான கனமழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.