ETV Bharat / state

"அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் 3 சிசிடிவி கேமராக்கள் மட்டுமே உள்ளன" - ஆர்டிஐயில் அதிர்ச்சி தகவல்!

author img

By

Published : Apr 14, 2023, 7:12 PM IST

பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பொருத்தப்பட்டிருப்பதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

Nellai
அம்பாசமுத்திரம்

நெல்லை: திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம், காவல் சரகத்திற்குட்பட்ட அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக அண்மையில் புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலரும் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த குற்றச்சாட்டில் சம்மந்தப்பட்ட ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில் உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தப் புகார் தொடர்பான விசாரணையில், காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் சோதனை செய்தபோது, பல் பிடுங்கப்பட்டதாக கூறப்படும் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகள் பதிவாகவில்லை எனத் தெரியவந்தது.

இதையடுத்து திருநெல்வேலி மாவட்ட காவல் நிலையங்களில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக பாண்டியராஜன் என்பவர் கேட்டிருந்தார். இதற்கு தற்போது பதில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உட்பட 37 காவல் நிலையங்களில் சுமார் 213 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இதில் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் வெறும் மூன்று கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் பொருத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.

அதேபோல் இரவு நேரங்களிலும் தெளிவாக செயல்படும் வகையிலான நவீன கண்காணிப்பு கருவிகள் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி உள்ளிட்டப் பல்வேறு காவல் நிலையங்களில் இரவு நேரங்களில் தெளிவாக காட்சிகளைப் பதிவு செய்யும் தகுதி உடைய கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.

ஆர்டிஐ தகவல்
ஆர்டிஐ தகவல்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, 18 மாதங்கள் வரை கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்ற நிலையில், வெறும் 150 நாட்கள் வரை மட்டுமே காட்சிகளை சேமித்து வைக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மொத்தத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புப்படி இந்த காவல் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதும், உண்மை தகவல்களை மறைப்பதற்கு ஏதுவாக பெயரளவிற்கு மட்டுமே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பல் பிடுங்கிய விவகாரம்.. காத்தாடிய விசாரணை கமிஷன்... மீண்டும் 2 நாட்கள் விசாரணை என அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.