ETV Bharat / state

உயர் அலுவலர்கள் உத்தரவு... உடல்நிலை பாதிப்பு: மவுனம் கலைத்த நெல்லை பெண் காவலர்

author img

By

Published : Nov 13, 2021, 2:11 PM IST

நான் கௌரவமான பணியில் இருக்கிறேன், தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை, பணியில் சிறப்பாகப் பணிபுரிந்து என்னை பணியைப் புறக்கணித்ததாகவும்  உயர் அலுவலர்களின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் மெமோ (குறிப்பாணை) அனுப்பினர், அதனாலும் தலைவலி ஏற்பட்டு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது என்று ஆய்வாளர் மகேஸ்வரி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பெண் காவலர் தற்கொலை முயற்சி
பெண் காவலர் தற்கொலை முயற்சி

திருநெல்வேலி: மாநகர காவல் துறையில் பாளையங்கோட்டை போக்குவரத்துப் பிரிவு காவல் ஆய்வாளராகப் பணிபுரிந்துவருபவர் மகேஸ்வரி. பணிச்சுமை காரணமாகவும் உயர் அலுவலர்களின் நெருக்குதல்கள் காரணமாகவும் மகேஸ்வரி திடீரென அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.

மகேஸ்வரி கடந்த வாரம் திடீரென நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாகத் தகவல்கள் வெளியாகின.

குறிப்பாக நெல்லை மாநகர காவல் துறையில் தொடர்ச்சியாகக் காவலர்கள், உயர் அலுவலர்கள் பலர் மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் வாடிக்கையாக தொடர்ந்துவருகிறது.

மகேஸ்வரி ஆடியோ

எனவே ஆய்வாளர் மகேஸ்வரியும் பணிச்சுமை, உயர் அலுவலர்களின் டார்ச்சர் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த மகேஸ்வரி பூரண குணமடைந்து சில நாள்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.

இந்தச் சூழ்நிலையில் தான் தற்கொலை செய்யவில்லை என்றும், இதற்கான அவசியம் எனக்கு இல்லை என்றும் ஆய்வாளர் மகேஸ்வரி ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன்

அந்த ஆடியோவில் பேசும் அவர், "காவல் துறையில் இருப்பதால் சமூக வலைதளங்களில் எதுவும் பேச வேண்டாம் என்று அமைதியாக இருந்தேன். ஆனால் என்னைப் பற்றிய சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன. நான் கௌரவமான பணியில் இருக்கிறேன் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை மாநகரில் தொடர்ச்சியாகப் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது கடும் மழையிலும் வேலை செய்தேன். அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்தேன்.

தற்கொலை தீர்வல்ல
தற்கொலை தீர்வல்ல

ஏற்கனவே பணியில் சிறப்பாகப் பணியாற்றியதற்காக உயர் அலுவலர்களால் பாராட்டைப் பெற்றுள்ளேன். எனது தந்தை இறந்த செய்தி கேட்ட பிறகும் சுதந்திர தின அணிவகுப்பு நடத்திய காரணத்திற்காக தற்போதைய முதலமைச்சரிடம் வாழ்த்துப் பெற்றேன்.

உயர் அலுவலர்களின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை

இது போன்று பணியில் சிறப்பாகப் பணிபுரிந்து என்னை பணியைப் புறக்கணித்ததாகவும் உயர் அலுவலர்களின் உத்தரவைச் செயல்படுத்தவில்லை என்றும் குறிப்பாணை அனுப்பினர், அதனாலும் தலைவலி ஏற்பட்டு எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

அதே சமயம் தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் எனக்கில்லை. ஒரு பெண்ணாகக் கல்லூரி மாணவிகளுக்கு நான் பல்வேறு விழிப்புணர்வைச் செய்துள்ளேன். அதன் காரணமாகவே இந்த ஆடியோவை வெளியிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

குறிப்பாணை அளித்த சம்பவம்

பெண் ஆய்வாளர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாகக் கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருப்பது நெல்லை மாநகர காவல் துறையில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திவருகிறது.

தற்கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று ஆய்வாளர் மகேஸ்வரி தெரிவித்திருந்தாலும்கூட நேர்மையாகப் பணி செய்யும் தனக்கு உயர் அலுவலர்கள் குறிப்பாணை அளித்த சம்பவம் தலைவலியை ஏற்படுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

உயர் அலுவலர்களின் நெருக்கடி

எனவே உயர் அலுவலர்களின் நெருக்கடி காரணமாகவே இந்த ஆடியோவை அவர் வெளியிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சென்னையில் நேற்று முந்தினம் பெண் காவல் ஆய்வாளர் ஒருவர் கல்லறையில் மயங்கிக் கிடந்த இளைஞரைத் தோளில் சுமந்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த சம்பவம் ஒட்டுமொத்த காவல் துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

இதுபோன்ற சூழ்நிலையில் பெண் காவல் ஆய்வாளர்கள் சிலர் உயர் அலுவலர்களின் நெருக்கடிக்கு ஆளாகிவரும் சம்பவம் தமிழ்நாடு காவல் துறையில் திரைமறைவில் அரங்கேறும் அநீதியாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிகள்: சேர்ந்து உழைப்போம் - முன்களப் பணியாளர்களுக்கு முதலமைச்சர் ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.