அரபிக் கடலில் உண்டான டாக் தே புயலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நேற்று (மே.15) முதல் ஒரு சில இடங்கள் கனமழையும், பெருவாரியான பகுதிகளில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டத்தில் பேரிடர் மீட்புக் குழு, தீயணைப்புத் துறையினர் போன்ற பல்வேறு துறையினரும் தயார் நிலையில் உள்ளனர்.
தொடர்ந்து, இரண்டாவது நாளாக இன்றும் பந்தலூர், நடுவட்டம், அப்பர் பவானி, அவலாஞ்சி போன்ற பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், பந்தலூர், புத்தூர் வயல், நிலக்கோட்டை உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆங்காங்கே முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் முகக் கவசம், குளிர்கால கம்பளி போன்றவை வழங்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பாதுகாப்பான முறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பந்தலூர், சேரங்கோடு பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் சரிந்து காணப்படுகிறது. இதை தீயணைப்புத் துறையினர் அப்புறப்படுத்தி வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை பெரிய அளவிலான பொருள்சேதமோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை.
இந்நிலையில் நீலகிரியில் பெய்து வரும் மழையால் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கூடலூர் அருகே உள்ள பந்தலூரில் 18 செ.மீ, தேவாலாவில் 14 செ.மீ, சேரங்கோட்டி 10 செ.மீ மழையும், உதகையை அடுத்துள்ள அப்பர்பவானி பகுதியில் 10 செ.மீ மழையும் நடுவட்டம் பகுதியில் 9 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.