போட்டியிடும் தொகுதிகள் இன்னும் இறுதியாகாத நிலையில், உதகை சட்டமன்ற தொகுதியில், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக போட்டியிட இருப்பதாக இப்போதே அக்கட்சியினர் மக்களை நேரடியாக சந்தித்து ஓட்டு சேகரித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, உதகை அருகேயுள்ள மஞ்சூர், கரிய மலை பகுதிகளில், பாஜக மாவட்ட பிரதிநிதி மயில்வாகனம் தலைமையிலான அக்கட்சியினர் தொழில்துறை விண்ணப்பப் படிவங்களை கொண்டு சென்று, தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் இலவசமாக தையல் மெஷின் வழங்கப்படும் என்று கூறி விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
இதனை அறிந்த அப்பகுதி திமுகவினர் அதனை தடுத்து நிறுத்தி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற தேர்தல் பறக்கும் படையினர், பாஜகவினர் வைத்திருந்த டோக்கன்கள் மற்றும் 70 விண்ணப்ப படிவங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் பாஜகவினர் மீது மஞ்சூர் காவல் நிலையத்தில் தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர்ர்.
தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் போது, அரசு நலத் திட்டங்களை வழங்கக்கூடாது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் பாஜகவினர் தொழில்துறை மூலம் வழங்கப்படும் இலவச தையல் மெஷின் வழங்குவதாகக் கூறி விண்ணப்பம் வழங்கியது பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்த உதவி மேலாளர் பணி நீக்கம்!