ETV Bharat / state

கணவர், மகனுக்கு கரோனா தொற்று-அதிர்ச்சியில் பெண் உயிரிழப்பு

author img

By

Published : Jul 28, 2020, 3:04 PM IST

தஞ்சாவூர்: தனது கணவருக்கும் மகனுக்கும் கரோனா நோய்த்தொற்று தாக்கிவிட்டதே என்ற அதிர்ச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பலியான பெண்
பலியான பெண்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த 45 வயதுள்ள விவசாயி, இவரது 12 வயது மகன் இருவருக்கும் கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து இவர்கள் இருவரையும் சுகாதாரத் துறையினர் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று கரோனா முகாமில் தங்க வைக்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் தனது கணவருக்கும் மகனுக்கும் கரோனா நோய்த்தொற்று தாக்கிவிட்டதே என்ற கவலையில் இருந்த விவசாயின் மனைவி திடீரென மயங்கி கீழே விழுந்தார். இதை அடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அப்பெண்மணி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இறந்த அந்தப் பெண்ணின் தாயாருக்கு 7 நாள்களுக்கு முன் கரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு தஞ்சை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தனது கணவருக்கும் மகனுக்கும் நோய்த்தொற்று வந்துவிட்டதே என கவலை அடைந்த இந்தப் பெண் அதிர்ச்சியில் இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இறந்த அந்தப் பெண்ணின் உடல் அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் முகாமில் சிகிச்சை பெற்றுவரும் இறந்த பெண்ணின் கணவர் - மகன் ஆகியோர் அந்தப் பெண்ணின் உடலை காண தங்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று அலுவலர்களுக்கு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.