ETV Bharat / state

சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் விசேஷ திருக்கல்யாணம்.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 8:16 AM IST

Maha Bhairava Ashtami Thirukalyanam: சோழபுரத்தில் உள்ள மகா பைரவேஸ்வரர் திருக்கோயிலில் மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவேஸ்வரிக்கும் விசேஷ திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

cholapuram Bhairaveshwara Temple
சோழபுரம் பைரவேஸ்வரர் திருக்கோயிலில் விசேஷ திருக்கல்யாணம்

சோழபுரம் பைரவேஸ்வரர் கோயிலில் விசேஷ திருக்கல்யாணம்

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகேயுள்ள சோழபுரத்தில் பழமை வாய்ந்த பைரவேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இப்பூவுலகில் முதலில் பைரவர் தோன்றிய ஸ்தலமாக போற்றப்படும் இங்கு, அஷ்டமி திதி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் பைரவர் மற்றும் பைரவி வழிபாட்டிற்கு சிறப்பான நாட்களாக கூறப்படுகிறது.

மகா பைரவேஸ்வரருக்கு ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, கோரோஜனை, ஜாதிக்காய், அத்தர், பச்சை கற்பூரம், ஜாதிபத்தி ஆகிய 8 அஷ்டசக்தி திரவியங்களை கூடிய அரைத்த சந்தனத்தைக் கொண்டு பஞ்சகல்பகாப்பு அபிஷேகம் செய்வித்து, வழிபடுவது மிகுந்த நற்பலன்களைத் தரும் என்றும், பகைமை நீங்கி, இல்லறம் சிறக்க, வணிகத்தில் மேன்மை பெற, எதிரிகளிடமிருந்தும், துன்பங்களில் இருந்தும் காக்கும் வல்லமை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிகு தலத்தில் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமி தினமான மகா பைரவாஷ்டமி என்ற பைரவர் ஜெயந்தியை முன்னிட்டு, நேற்றிரவு மகா பைரவேஸ்வரருக்கும், மகா பைரவேஸ்வரியான மகா பைரவிக்கும், விசேஷமாக வேறு எந்த தலத்திலும் காண முடியாத திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக நாதஸ்வர மேள தாள மங்கல வாத்தியங்கள் முழங்க, மாலை மாற்றும் நிகழ்வும் தொடர்ந்து நலங்கு வைத்தல், கங்கனம் கட்டுதல், புணுல் அணிவித்தல், பட்டு வஸ்திரங்கள் சமர்ப்பித்தல், சீர்வரிசை தட்டுக்கள் சமர்பித்தல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், புனிதநீர் கடத்தை ஸ்தாபித்து, சிவச்சாரியார்கள் ஹோமம் வளர்த்து, வேத மந்திரங்கள் ஜபித்து பிரவரம் கூறிய பின்னர் உதிரி மலர்கள் சாரல் மழையாய் பொழிய, பைரவி கழுத்தில் திருமாங்கல்யம் பூட்ட, பைரவேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பஞ்சார்த்தி செய்யப்பட்டு, அனைவருக்கும் அருட்பிரசாதங்கள், மங்கலப் பொருட்கள், அன்னபிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதையும் படிங்க: எம்பி செந்தில்குமார் சர்ச்சை பேச்சு; முதலமைச்சர் ஸ்டாலின் கண்டித்ததாக ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.