தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஸ்ரீ ஆதி கும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், ஸ்ரீ அபிமுகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களில் மாசி மகப் பெருவிழா சென்ற மாதம் 28ஆம் தேதி கொடியேற்றதுடன் கோலாகலமாகத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் அம்பாளுடன் ஸ்வாமி வீதி உலா வந்தார்.
இவ்விழாவின் நான்காம் நாளான நேற்று, ஸ்ரீ ஆதிபேஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெற்றது. ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமணியர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் வெள்ளிப் பல்லக்கிலும், ஸ்ரீ மங்களாம்பிகையுடன், ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் ஏகாசனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பின்னர் பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா புறப்பட்டது.
இதே போன்று 63 நாயன்மார்களும் தனித் தனி ரிஷப வாகனத்தில் எழுந்தருளினர். அப்போது வழி நெடுகிலும் ஏராளமான பக்தர்கள் பஞ்ச மூர்த்திகளையும், நாயன்மார்களையும் வழிபட்டனர். மாசி மகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பஞ்ச மூர்த்திகளின் தேர் திருவிழா வரும் 6ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையும் படிங்க: படைவெட்டி மாரியம்மனுக்கு பக்தர்களின் பாலாபிஷேகம்!