தஞ்சாவூர்: 94 பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகி பலியான சம்பவத்தின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று காலை தனது கட்சி நிர்வாகிகளுடன் சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார்.
அங்கு பள்ளி முன்பு மலர் வளையம் வைத்தும், தீப சுடர் ஏற்றி வைத்தும், மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினார். பின்னர், பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறி, அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 94 குழந்தைகள் தீ விபத்தில் சிக்கி பலியான துயர சம்பவத்தின் 18ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இன்று இப்பள்ளிக்கு வந்து மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியுள்ளேன்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களை சந்தித்ததில், அவர்கள் சம்பவம் நடந்த பள்ளியை அரசுடைமையாக்கி, பொது நூலகம் அமைத்து தருவதுடன், தொடர்ந்து ஆண்டு தோறும் பெற்றோர் இங்கு அஞ்சலி செலுத்திட, வசதிகள் செய்து தர வேண்டும். ஜூலை 16ஆம் நாளை குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்து, உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.
நடிகர் சங்கம் சார்பில் பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு நிவாரணம் அளிப்பதாக உறுதியளித்த போதும், அதற்காக பல நடிகர்கள் சங்கத்திற்கு நிவாரண தொகையாக அளித்த போதும், இதுவரை அவை பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். இது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகளுடன் கலந்து பேசுவேன் என்று தெரிவித்த அவர், பாஜகவை சேர்ந்த நயினார் நாகேந்திரன் தமிழகத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, முதலில் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரிக்கட்டும்.
அதன் பிறகு தமிழகத்தைப் பிரிப்பது குறித்து முடிவு செய்யலாம் என சீமான் கிண்டலாக குறிப்பிட்டார். நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அனிதா தொடங்கி நேற்று அரியலூர் மாணவி வரை உயிரை மாய்த்து கொண்டுள்ளனரே என்ற கேள்விக்கு, இங்கு மனித உயிருக்கு மதிப்பில்லை, உயிரை மாய்த்துக்கொள்வதால் ஒன்றும் சாதிக்கப்போதில்லை.
உயிரோடு இருந்து போராடி தான் அவர்கள் சாதிக்க வேண்டும். இத்தகைய துயர சம்பவங்கள் இனி தொடரக்கூடாது. அவர்களை பெற்றோர்களும் அவர்களை வெற்றி பெற்றே தீர வேண்டும் என நிர்பந்திக்க கூடாது.
பெற்றோர்கள் அவர்களை பாதுக்காக்க வேண்டும். தோல்வி பயத்தால், இந்த சமுதாயத்தை, தன் சுற்றத்தை, குடும்பத்தை எதிர்கொள்ள முடியாமல், மனவலிமையற்று 12ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களே உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலையில், புதிய கல்விக் கொள்கையில், 3ஆம் வகுப்பு, 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வு என்றால் நம்முடைய மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது வார்த்தைகள் பட்டியல் வெளியிட்டு இருப்பது குறித்த கேள்விக்கு, நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் ஜனநாயகம் இல்லை, தேசபற்று, தேச ஒற்றுமை என்பதெல்லாம் பெரியளவிலேயே இருக்கிறது. விவாதிக்காமலேயே சட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. காவிரி நீர் பிரச்சனையாகட்டும், நீட் தேர்வாகட்டும், நாம் ஒவ்வொரு விசயத்திற்காகவும், நம் உரிமையை பெற நீதிமன்றம் சென்றே தீர்வு காண வேண்டி உள்ளது என்றார்.
இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மக்கள் அமைதி காக்க முதலமைச்சர் வேண்டுகோள்