தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ளது தென்னங்குடி வடக்கு ஊராட்சி கிராமம். இந்தக் கிராமம் பேராவூரணி வட்டாரப் பகுதிகளில் முன்மாதிரியான கிராமமாக விளங்கிவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரசு ஊரடங்கு அறிவித்திருந்த நாளிலிருந்து சமூக விலகலை இந்தக் கிராமத்து மக்கள் முறையாக கடைப்பிடித்துவருகின்றனர்.
ஊரில் உள்ள நான்கு வழிச் சாலைகளை ஒரே சாலையாக மாற்றி போக்குவரத்தை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இதுதவிர அரசு அறிவித்த நிவாரணப் பொருட்களை வாங்குவதற்காக மக்கள் நியாயவிலைக் கடைகளில் கூட்டம் கூட வாய்ப்பு இருக்கும் என்பதால், இந்த தென்னங்குடி வடக்கு ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவர் குணதா சரவணன் தன்னார்வலர்களைக் கொண்டு நிவாரணப் பொருட்களை ஒவ்வொரு வீடாகச் சென்று நேரடியாக கொடுத்துவருகிறார்.
அதேபோன்று அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக யாரும் அடிக்கடி வெளியூர் செல்லக்கூடாது என்பதை மனதில் கொண்டு அரசு சொல்வதை அப்படியே நிறைவேற்றிவருகிறார். ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று ஏதேனும் பொருட்கள் வாங்க வேண்டும் என்றால், எங்களிடம் தெரிவியுங்கள் நாங்களே வாங்கிக் கொண்டு வந்து தருகிறோம் எனக் கூறியுள்ளார்.
சொன்ன சொல் தவறாமல், தன்னார்வலர்கள் மூலம் காய்கறி உள்ளிட்ட பொருட்களை அவரவர் வீட்டுக்கே கொண்டு சென்று கொடுத்து வருகிறார் குணதா சரவணன். இது பேராவூரணி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்பினால் கைது - க.பாண்டியராஜன்