ETV Bharat / state

ஆஷாட நவராத்திரி: கனிவகை அலங்காரத்தில் அருள்பாலித்த தஞ்சை பெரியகோயில் வாராஹி அம்மன்!

author img

By

Published : Jun 26, 2023, 11:00 PM IST

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் கனி வகைகளான ஆப்பிள், அன்னாசி, பலா, ஆரஞ்சு, திராட்சை உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சை பெரிய கோயிலில் ஆஷாட நவராத்திரி விழா

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம், உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இந்தக் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தன்னிச்சையாக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த ஆஷாட நவராத்திரி விழா தஞ்சை பெரியகோயிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டும் நடைபெறுவது வழக்கம். வேறு எங்கும் வாராஹி அம்மனுக்கு நவராத்திரி விழா நடைபெறுவது இல்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூன் 18ந் தேதி தொடங்கியது.

தொடர்ந்து 10நாட்களுக்கு நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதானிய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்களுடன் அபிஷேகமும் சிறப்புத் தீபாராதனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் அதனைத்தொடர்ந்து விழாவின் ஒரு அங்கமாக அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் நடைபெற உள்ளது. மேலும் மாலையில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் நடைபெறுகிறது. அதைப்போல் கடந்த 18ஆம் தேதி அன்று முதல் நாள் அலங்காரமாக அம்மனுக்கு பல்வேறு இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுச் சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், மூன்றாம் நாள் குங்குமம் அலங்காரமும், நான்காம் நாள் சந்தனக் காப்பு அலங்காரமும், ஐந்தாம் நாள் தேங்காய் பூ அலங்காரமும், ஆறாம் நாளாக மாதுளை முத்துக்களால் ஆன அலங்காரமும், ஏழாவது நாளாக நவதானியத்தால் சிறப்பு அலங்காரமும், எட்டாவது நாளாக வெண்ணெய் அலங்காரம் நடைபெற்றது.

9ஆம் நாளான இன்று (ஜுன் 26) கனி வகைகளான ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், சாத்துகுடி, அன்னாசி, பலாப்பழம் உள்ளிட்டவைகளால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது. மேலும் மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சியாக கொச்சி மினி பிரமோத் குழுவினரின் மோகினி ஆட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும், இசை நிகழ்ச்சியை கண்டும் ரசித்தனர்.

இதையும் படிங்க: வெண்ணெய் அலங்காரத்தில் அருள்பாலித்த தஞ்சை பெரியகோயில் வாராஹி அம்மன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.