ETV Bharat / state

வெண்ணெய் அலங்காரத்தில் அருள்பாலித்த தஞ்சை பெரியகோயில் வாராஹி அம்மன்!

author img

By

Published : Jun 26, 2023, 7:18 PM IST

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா கடந்த ஜூன் 18 ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில் 10 நாட்களுக்கு வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா சிறப்பு
தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா சிறப்பு

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவிலில் வாராஹி அம்மன் நவராத்திரி விழா சிறப்பு

தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில், ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழாவில் இன்று வெண்ணெய் அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரியகோயில் என்று அழைக்கப்படும் அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலகப் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

இந்தக் கோயிலில் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் தனி சன்னதியில் தன்னிச்சையாக வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார். இந்நிலையில் மஹாவாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் தஞ்சை பெரியகோயிலில் உள்ள ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மட்டுமே நடைபெறுவது தனிச்சிறப்பாக விளங்குகிறது.

இந்த சிறப்புமிகு பூஜை தஞ்சை பெரியகோயில் தவிர்த்து வேறு எங்கும் நடைபெறாதது இதன் கூடுதல் சிறப்பாக விளங்குகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆஷாட நவராத்திரி 21ம் ஆண்டு பெருவிழா தஞ்சை பெரியகோயிலில் கடந்த ஜூன் 18ந் தேதி ஸ்ரீ மஹாகணபதி ஹோமம், ஸ்ரீ மஹா கணபதி அபிஷேகம், ஸ்ரீ மஹா வாராஹி அபிஷேகம் ஆகியவற்றுடன் வெகு விமர்சையாகத் தொடங்கியது.

10நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம், மஞ்சள் அலங்காரம், குங்கும அலங்காரம், சந்தன அலங்காரம், தேங்காய்ப்பூ அலங்காரம், மாதுளை அலங்காரம், நவதான்ய அலங்காரம், வெண்ணெய் அலங்காரம், கனி வகை அலங்காரம், காய்கறி அலங்காரம், புஷ்ப அலங்காரம் என தினமும் அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்களுடன் சிறப்பு அபிஷேகங்களும் தீபாராதனைகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் இதனைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா மற்றும் பூச்சொரிதலும் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது. மேலும் மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நந்தி மண்டபத்தில் தினமும் நடைபெறுகின்றது. ஆஷாட நவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிவித்துக் கொண்டனர். அதைப்போல் கடந்த 18 ஆம் தேதி அன்று முதல் நாள் அலங்காரமாக பல்வேறு இனிப்பு வகைகளால் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு மஹா தீபாராதனை காட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் நாள் ஸ்ரீ மஹா வாராஹி அம்மனுக்கு மஞ்சள் அலங்காரமும், மூன்றாம் நாள் குங்குமம் அலங்காரமும், நான்காம் நாள் சந்தனக் காப்பு அலங்காரமும், ஐந்தாம் நாள் தேங்காய் பூ அலங்காரமும், ஆறாம் நாளாக மாதுளை முத்துக்களால் செய்யப்பட்ட அலங்காரமும், ஏழாவது நாளாக நவதானியத்தால் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து எட்டாவது நாளாக நேற்று (ஜூன் 25) மஹா வாராஹி அம்மனுக்கு வெண்ணெய் அலங்காரம் சிறப்பாகச் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காட்டப்பட்டது.

மேலும் மத்திய அரசின் தஞ்சை தென்னக பண்பாட்டு மையம் மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் நந்தி மண்டபத்தில் கலை நிகழ்ச்சியாகப் பிரபல கர்நாடக இசை மற்றும் திரைப்பட பின்னணி பாடகி மஹதி குழுவினரின் கர்நாடக இசை கச்சேரி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாராஹி அம்மனை வழிபட்டும், இசை நிகழ்ச்சியை கண்டும் ரசித்தனர்.

இதையும் படிங்க: பழனி புலிப்பாணி ஆசிரமத்தில் சபரீசனின் தந்தை சாமி தரிசனம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.