தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகிலுள்ள பெருமகளூரில் பழங்கால சோமநாதர் ஆலயம் ஒன்று உள்ளது. இந்த கோயில் பல காலமாக பராமரிப்பின்றி இருந்துள்ளது. பிறகு, இடிபாடுகளுடன் கிடந்த ஆலயத்தை சீரமைக்கும் பணியில் ஆலய நிர்வாகிகள் ஈடுபட்டு வந்துள்ளனர். இதையடுத்து அதில் உள்ள கல்வெட்டுகளை ஆராய்ந்தபொழுது அதில் மராத்தி மொழியின் ஒரு பகுதியான மோடி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
தொடர்ந்து தஞ்சையில் உள்ள தொல்லியல் ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் வந்து அந்த எழுத்துக்களை ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர்கள் கூறுகையில், " இது புதிதாக கண்டறியப்பட்ட மராத்திய மொழியில் ஒரு வடிவமான மோடி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டு. சஞ்சீவி ஆட்சி செய்த மராட்டிய மன்னர் பிரதாப சிம்மன் காலத்தில் இந்தக் கோயில் கட்டியதாக தெரிகிறது. இந்த கல்வெட்டின் பக்கவாட்டில் தமிழ் எழுத்துக்களும் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் எழுத்துக்கள் சிதைந்து போய் உள்ளதால் படிக்க முடியாத நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சோழர் காலத்து கோயிலில் கிடைத்துள்ள மராத்தி மொழி மோடி எழுத்தில் அமைந்த கல்வெட்டு இதுவே ஆகும் " என்றார்.
இதையடுத்து மராத்திய மொழியில் சிறந்த பயிற்சி பெற்ற வல்லுநர்களைக் கொண்டு இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களை கண்டறிய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இந்த கோயிலை சுற்றிலும் தொல்லியல் துறை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.
இரண்டு வருடங்களுக்கு முன்புதான் இந்த கோயிலின் அருகிலுள்ள ஒரு பாசன வாய்க்காலில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.