தென்காசி மாவட்டத்தில் பகவதிபுரம், செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், பாம்புக்கோவில் சந்தை, சங்கரன்கோவில் ஆகிய ஆறு ரயில் நிலையங்கள் உள்ளன. கரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து சென்ற ஆறு மாத காலமாக முடக்கப்பட்டிருந்தது.
சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு தளர்வு காரணமாக தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில், தினசரி ரயில் உள்ளிட்டவை செங்கோட்டையிலிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டுவருகின்றன.
இந்த நிலையில் சென்ற ஆறு மாத காலமாக ரயில்கள் இயங்காத நிலையில் ரயில் நிலையங்களில் செயல்படும் மக்கள் சேவைக்கான தொலைபேசி எண்ணுக்கு கட்டணம் செலுத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன் காரணமாக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி சேவையை துண்டித்துள்ளது. இது குறித்து செங்கோட்டை ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தென்காசி மாவட்டத்திலுள்ள பல்வேறு ரயில் நிலையங்களில் மக்கள் சேவைக்கான தொலைபேசி எண் துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பயணிகள் முன்பதிவு குறித்த விவரங்கள், ரயில் நேரம் குறித்த விவரங்களை அறிய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நேரடியாக ரயில்வே நிலையத்திற்கு வந்து சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
மேலும் செங்கோட்டை ரயில் நிலையத்தில் நிர்வாகிகள் யாரும் இல்லாமல் கேட்பாரற்று காணப்படுவதால் பொதுமக்கள் ரயில் குறித்த விவரங்களை நேரடியாக வந்து பெற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இதனை ரயில்வே நிர்வாகம் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 21 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு: கலக்கத்தில் லாரி உரிமையாளர்கள்