இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021க்கு சேலம் மாவட்டத்தில் உள்ள 7 ஆயிரத்து 490 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 5 ஆயிரத்து 727 கட்டுப்பாட்டு கருவிகளும், 6 ஆயிரத்து 170 வாக்காளர்கள் ஒப்புகை சீட்டு இயந்திரங்களும் முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வாக்குப்பதிவு இயந்திர இருப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை பாரத் மின்னணு நிறுவன பொறியாளர்களால் முதல்நிலை சோதனை மேற்கொள்ளும் பணியினை அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அ.ராமன் தொடங்கி வைத்தார்.
பொறியாளர்களால் வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருவதை இணை தலைமை தேர்தல் அலுவலர், சேலம் மாவட்ட பொறுப்பு அலுவலர் வி.ராகவேந்திரா, மாவட்ட ஆட்சியர் ராமன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தியாகராஜன், தனி வட்டாட்சியர் மகேஸ்வரி, தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.