ETV Bharat / state

'திமுகவில் மேலும் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..!' - எடப்பாடி பழனிசாமி

author img

By

Published : Jun 12, 2022, 10:06 PM IST

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் உயிரிழந்தபோதும் அரசு தூங்கிக்கொண்டிருப்பதாக தமிழ்நாட்டின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

’திமுகவில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..!’ - எடப்பாடி பழனிச்சாமி
’திமுகவில் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்..!’ - எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம், நிலவாரப்பட்டியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 50 அடி உயர கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.

தொடர்ந்து விழாவில் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர், ”ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருட்கள் புழக்கம் என பிரச்னைகள் தான் உள்ளன.

தேர்தல் நேரத்தில் சொன்னபடி, நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை. கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு தற்போது 50 நிபந்தனைகள் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர். கடன் பெற்றவர்கள் 45 லட்சம் பேர். ஆனால் 15 லட்சம் பேருக்குதான் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களின் நிலை என்ன?” என்று அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் கேள்விகளையும் முன்வைத்தார்.

மேலும், “குறிப்பாக, பெண்களுக்கான உரிமைத்தொகை வழங்குவதாகக் கூறி பலர் நம்பி வாக்களித்தனர். ஆனால், உரிமைத்தொகை வழங்கப்படவில்லை. முதியவர் உதவித்தொகை உயர்த்தப்படும் என்று கூறி அவர்களையும் ஏமாற்றியவர் ஸ்டாலின். இப்படி, கொடுத்த வாக்குறுதிகளை எதுவும் நிறைவேற்றவில்லை.

தேர்தல் வந்தால் அழகாக பேசுவார்! முடிந்ததும் அப்படியே கைவிட்டுவிடுவார் ஸ்டாலின். ஜெயலலிதா கொண்டு வந்த மானிய விலை இருசக்கர வாகனத்திட்டம், மடிக்கணினி திட்டம் போன்றவற்றை நிறுத்திவிட்டனர். ஏழைகளுக்கான திட்டங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

நான் முதலமைச்சராக இருந்தபோது மருத்துவக்கல்லூரியில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஏழை மக்களின் மீது பாசம் கொண்ட அரசு, அதிமுக அரசு. கிராமத்தில் பிறந்து ஏழை மக்களோடு வாழ்ந்தவன் என்பதால் ஏழைகளின் கஷ்டம் எனக்குப் புரியும்.

இப்போது இருக்கும் முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது. குடும்பம் வளரணும். குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வேண்டும் என்பதே நோக்கம். வாரிசுகள் மட்டுமே பதவிக்கு வருவதற்கு திமுக என்ன ராஜ பரம்பரையா? எந்த நிலையில் இருப்பவர்களும் பதவிக்கு வரமுடியம் என்பதுதான் அதிமுக.

திமுகவில் நான் இருந்திருந்தால் முதலமைச்சராகவோ? எதிர்க்கட்சித்தலைவராகவோ வந்திருக்க முடியுமா? அதிமுகவில் உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் பல பேர் உயிரிழந்தும் இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.

திமுகவில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் இல்லை. உதயநிதி, சபரீசன், துர்கா ஸ்டாலின் என மேலும் மூன்று முதலமைச்சர்கள் உள்ளனர்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: மொழிப்போர் தியாகி மார்ஷல் நேசமணியின் 128 ஆவது பிறந்த தினம் கொண்டாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.