ETV Bharat / state

அழிவின் விளிம்பில் பறவை இனங்கள் - பறவையியல் ஆராய்ச்சியாளர்கள் கொடுக்கும் எச்சரிக்கை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 12:16 PM IST

Salem birds researchers demands: சேலம் மாவட்டத்தில் பறவை இனங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பாய்வு செய்த பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், எட்டு ஆண்டுகளில் 74 வகையான பறவை வகைகள் அழிவின் விளிம்பிற்கு சென்றுள்ளதாகவும், 46 பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் தெரிவித்து உள்ளனர்.

பறவைகள் ஆராய்ச்சியாளர்கள்
பறவைகள் ஆராய்ச்சியாளர்கள்

சேலம்: கடந்த 8 ஆண்டுகளில் தமிழகத்தில் 74 பறவை இனங்கள் அழியும் தருவாய்க்கு சென்று உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. பறவை இனங்களின் பாதுகாப்பு நிலையை மதிப்பாய்வு செய்த பறவையியல் ஆராய்ச்சியாளர்கள், எட்டு ஆண்டுகளில் 74 வகையான பறவை வகைகள் குறைந்து உள்ளதாகவும், 46 பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுவதாகவும் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.

பறவைகள் மதிப்பாய்வு: பறவையியல் கழக நிர்வாகிகள் கணேஸ்வர், ஏஞ்சலின் மனோ மற்றும் பறவைகள் ஆர்வலர் கலைச்செல்வன் ஆகியோர் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், "சேலம் மாவட்டத்தில் தற்போது வரை பதிவு செய்யப்பட்டு உள்ள சுமார் 350 பறவை இனங்களில், 316 பறவை இனங்களின் பாதுகாப்பு நிலை இந்த அறிக்கையில் மதிப்பாய்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த மதிப்பாய்வுகள் அனைத்தும் தேசிய அளவில் கணக்கிடப்பட்டு உள்ளன.

74 வகையான பறவை இனங்கள் குறைவு: 46 பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது. 75 பறவைகளுக்கு ஓரளவும், 195 பறவைகளுக்கு குறைந்தபட்ச அளவு பாதுகாப்பும் தேவைப்படுகிறது. சேலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் 114 வகையான பறவை இனங்கள் குறைந்து விட்டன. 24 வகையான பறவை இனங்கள் அதிகரித்து வருகின்றன. 54 வகையான பறவைகளின் நிலை சீராக உள்ளன. அதே போல் எட்டு ஆண்டுகளில் 74 வகையான பறவை அழிவின் தருவாயில் உள்ளது.

எண்ணிக்கை சரிவில் வனப் பறவைகள்: 23 வகை பறவை இனங்கள் அதிகரித்தும், 110 வகையான பறவைகள் நிலை சீராகவும் உள்ளன. கடந்த 30 ஆண்டுகளில் சேலம் மாவட்டத்தில் 59 சதவீத பறவை இனங்கள் குறைந்துவிட்டன. எட்டு ஆண்டுகளில் 36 சதவீத பறவைகள் குறைந்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்து வலசை வரும் வாத்துக்கள், கரையோர பறவைகளான உள்ளான்கள், இரைக்கொல்லி பறவைகள், வனப் பறவைகள் முதலியவை எண்ணிக்கையில் சரிந்து உள்ளன.

மீட்டுருவாக்கும் பணி: சேலத்தில் முன்பு எளிதாக பார்க்க முடிந்த பறவைகளைக் கூட தற்போது கண்டுபிடிக்கப்படுவது சவாலாகி விட்டது. அழிந்து வரும் பறவை இனங்களை மீட்டு உருவாக்கும் பணிகளை அறிவியல் பூர்வமாக செயல்படுத்த வேண்டும். கல்லூரி மாணவர்கள் பறவை நோக்கலில் ஈடுபட வேண்டும்.

அதிக பாதுகாப்பு: வெண்புருவ வாத்து, தட்டை வாயன், ஊசி வால் வாத்து, சின்ன மணல் கொத்தி, பட்டாணி உப்பு கொத்தி, கொசு உள்ளான், ஊசி வால் கோரை குத்தி, பச்சைக்கால் உள்ளான், சதுப்பு மண் கொத்தி, பழுப்புத்தலை கடற்காகம், மீசை ஆலா, கரை கொக்கு, கரண்டி வாயன், பழுப்புத்தலை, பாம்புக் கழுகு, மஞ்சள் நெற்றி மரங்கொத்தி, சிவப்பு வல்லூறு, வானம்பாடி, கருப்பு வெள்ளை பூங்குருவி, நீலப் பூங்குருவி, நீலத் தலை பூங்குருவி, காட்டுவாலாட்டி, பெயிலான், கானாங்கோழி, மண் கொத்தி,

ஆற்று ஆலா, வெண்கழுத்து நாரை, செந்தலை வல்லுரு, பூமன் ஆந்தை, பெண் பிடரி பட்டாணி குருவி, மஞ்சள் தொண்டை, சின்னான், கருப்பு சின்னான், செஞ்சிலம்பன், சீகாரப் பூங்குருவி, சிவப்பு வால் பூச்சி பிடிப்பான், காட்டு நீலக்குருவி, சாம்பல் வாலாட்டி உள்ளிட்ட பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு தேவைப்படுகிறது" என்று அந்த கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: நாமக்கல்லைத் தொடர்ந்து சேலத்திலும் உணவு தர சோதனை: சிக்கும் பிரபல உணவகங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.