ETV Bharat / state

சேலம் செயில் நிறுவனம் இடத்தில் உள்ள ராமர் பாதம்? தடையை மீறி பக்தர்கள் தரிசனம்.. வருவாய்த்துறை திடீர் ஆய்வு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 6:00 PM IST

Updated : Dec 6, 2023, 6:38 PM IST

சேலத்தில் ராமர் பாதம் அமைந்துள்ள இடத்தில் வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தியது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Etv Bharat
Etv Bharat

சேலம்: மாமாங்கம் பகுதியில அமைந்துள்ள தொன்மையான புராதன காலத்தைச் சேர்ந்த ராமர் பாதத்தை வழிபட செயில் ரீபேக்ட்டரி நிறுவன (Steel Authority of India Limited - SAIL) அதிகாரிகள் கடந்த 15 ஆண்டுகளாக தடை விதித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த வாரம் பொறுமை இழந்த பக்தர்கள் ஒன்று கூடி அதிரடியாக செயில் அதிகாரிகள் ஏற்படுத்திய தடையை மீறி, பழைய வெள்ளைக்கல் சுரங்கத்தின் உள்ளே சென்று ராமர் பாதத்தை வழிபட்டனர். மேலும் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் 'ராமர் பாதம்' கோயிலை நோக்கி அணி திரள ஆரம்பித்துள்ளனர்.

இதனால் செய்வதறியாது திகைத்து வரும் செயில் ரீபேக்டரி அதிகாரிகள் மீண்டும் இந்த வழித்தடத்தை மூடவும் மாற்று ஏற்பாடுகளை செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், ராமர் பாதம் தொடர்பாக செய்திகள் வெளியான நிலையில், சேலம் மாவட்ட நிர்வாகம் ராமர் பாதம் அமைந்த தொன்மையான பகுதியை ஆய்வு செய்ய வருவாய்த்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி, ராமர் பாதம் அமைந்துள்ள இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகள் இன்று (டிச.6) நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

மேலும், கோயில் அமைந்துள்ள பகுதியில் அருகில் உள்ள பட்டா நிலத்தின் அளவு குறித்தும் அதன் உரிமையாளர் எழுப்பி வரும் கேள்விகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இது தொடர்பான விரிவான அறிக்கையை விரைவில் மாவட்ட நிர்வாகத்திற்கு வருவாய்த்துறையினர் அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் சேலம் உருக்காலை உயர் அதிகாரிகள் செயில் ரீபேக்ட்டரி நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகளை உடனடியாக அழைத்து திடீர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

தொன்மையான இடத்தில் தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும், நில உரிமையாளரின் கேள்விகளுக்கு உரிய பதிலளித்து நில பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்டவைகளை சேலம் உருக்காலை நிர்வாகம் வலியுறுத்தி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, தொன்மையான ராமர் பாதத்தை மீட்க பாமக மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைக்கு போலீசார் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மாமாங்கம் பகுதி பாமக பிரமுகர் ஒருவர் கூறுகையில்,' செயில் ரீபேக்ட்டரி அதிகாரிகள் சிலர் காவல்துறை மூலம் மிரட்டல் விடுத்து ராமர் பாதத்தை மக்கள் சென்று தரிசிக்கக்கூடாது என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். உளவுத்துறை என்ற பெயரில் சாதாரண உடை அணிந்து சென்று ராமர் பாத விவகாரத்தில் தீர்வு கோரும் எங்களை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர். இதனை உடனடியாக விசாரித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், பக்தர்கள் இயல்பாக வந்து செல்லும் வகையில், செயில் நிர்வாகம் பூட்டி வைத்துள்ள நுழைவாயிலின் இரும்பு கதவுகளை திறந்து விட வேண்டும்' என்று வலியுறுத்தினார்.

ராமர் பாதம் வழிபாடு நடத்துவது தொடர்பாக கிராம மக்களை ஒன்றிணைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் பூஜைகள் நடத்துவதில் தீவிரம் காட்டினால் பாமகவினரால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்று அரசுக்கு உளவுத்துறை அதிகாரிகள் தகவல் அனுப்பியுள்ளதால், ராமர் பாதம் மற்றும் நில உரிமை விவகாரம் தீவிரமாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் குறித்து செயில் நிர்வாகத்தினரை ஈடிவி பாரத் பலமுறை தொடர்பு கொண்ட போதும் அவர்கள் செல்பேசி அழைப்பை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சட்டமேதை அம்பேத்கர் நினைவு நாள்; நாடாளுமன்ற வளாகத்தில் மரியாதை செலுத்திய தலைவர்கள்!

Last Updated :Dec 6, 2023, 6:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.