சேலம் சரபங்கா ஆற்றில் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், அதிமுகவில் கோஷ்டிப் பூசல் என்பது தவறான கருத்து. அதிமுக என்பது தொண்டர்களால் ஆட்சி செய்யப்படும் கட்சி என்பதால் இங்கு தலைமை என்ற சொல்லுக்கு இடமில்லை. ராஜன் செல்லப்பா பேசியதை முழுமையாக கேட்டுவிட்டு கருத்து தெரிவிக்கிறேன் என்று கூறினார்.
மேலும் அவர், அதிமுக பலம் பொருந்திய கட்சியாக வலுப்பெற்று வருகிறது. டிடிவி தினகரனிடம் சென்றவர்கள் தற்போது மீண்டும் அதிமுகவிற்கு வந்துகொண்டிருக்கின்றனர். தொண்டர்கள் ஆளும் கட்சிதான் அதிமுக. முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாகவே எம்.பி அஞ்சலி செலுத்தியபோது, பிற நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்ளவில்லை என தெரிவித்தார்.
முன்னதாக அவர், சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவே பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே சேலத்தில் பல இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டன. ஆனால் திமுகவினர் தேவையில்லாமல் பாலம் கட்டப்படுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
திமுக ஆட்சியின்போது ஆனந்தா பாலத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நில உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்காமல் இருந்தனர். திமுகவின் ஆட்சியில் கைவிடப்பட்ட சென்னை போரூர் பாலப்பணிகள் அதிமுகவின் ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளது. திமுகவினர் தற்போது வேண்டுமென்றே பாலங்கள் குறித்து விமர்சனம் செய்துவருகின்றனர் என்றார்.