ETV Bharat / state

வறண்டு போகும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் சோகம்... முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை?

author img

By

Published : Jul 26, 2023, 4:52 PM IST

கர்நாடக அரசு தமிழகத்திற்குத் தரவேண்டிய 41 டிஎம்சி தண்ணீரை தமிழக முதல்வர் அழுத்தம் கொடுத்து உடனடியாக நீரை பெற்றுத் தர வலியுறுத்தி விவசாயிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

mettur-dam-drying-up-delta-farmers-are-sad-chief-minister-to-take-action
வறண்டு போகும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் சோகம்..முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை ?

வறண்டு போகும் மேட்டூர் அணை.. டெல்டா விவசாயிகள் சோகம்..முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை ?

சேலம் : குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து கடந்த மாதம் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103. 35 அடியாக இருந்தது. மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் இருப்பைக் கருத்தில் கொண்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் மட்டுமே பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் வரத்து வெகுவாக குறைந்து வருவதால், தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 67 அடியாக சரிந்துள்ளது. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் 15 தினங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு நீர் திறக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் டெல்டா பாசன விவசாயிகள் பெரும் அளவு பாதிக்கப்படுவார்கள், எனவே உச்ச நீதிமன்ற உத்தரவின் படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக வழங்க வலியுறுத்தி பல்வேறு விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலத் தலைவர்
தங்கராஜ் தலைமையில், கர்நாடக மாநிலம் தமிழகத்திற்கு தரவேண்டிய 41 டிஎம்சி தண்ணீரை பெற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த தங்கராஜ் கூறுகையில், ''டெல்டா பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை கடைமடை வரை சென்று சேராததால் விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் கருகி உள்ளன.

உடனடியாக இதனையும் கணக்கீடு செய்து ஒரு ஏக்கருக்கு 35 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவின் படி கர்நாடக மாநிலம் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய 41 டிஎம்சி தண்ணீரை பெற தமிழக முதலமைச்சர் அழுத்தம் கொடுத்து நீரை பெற்றுத் தந்து உதவிட வேண்டும்.

தற்பொழுது மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் 15 தினங்களுக்கு மட்டுமே டெல்டா பாசனத்திற்கு நீர் கிடைக்கும். எனவே, மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே டெல்டா பகுதி விவசாயிகள் பிழைக்க முடியும். லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களையும் பாதுகாக்க முடியும்'' என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க : சேலத்தில் உச்சத்தை தொட்ட காங்கிரஸ் உட்கட்சிப் பூசல் - பொதுக்கூட்டம் நிறுத்தப்பட்டதால் நிர்வாகிகள் வேதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.