ETV Bharat / state

பதிண்டா துப்பாக்கிச்சூட்டில் சேலத்தை சேர்ந்த ராணுவ வீரர் கமலேஷ் பலி!

author img

By

Published : Apr 13, 2023, 11:51 AM IST

Updated : Apr 13, 2023, 12:41 PM IST

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 தமிழக ராணுவ வீரர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழந்திருந்தனர்.

army soldier from Salem district was killed in a firing incident in Punjab Bathinda
பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்

சேலம்: பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் இந்திய ராணுவ முகாம் உள்ளது. அங்கு ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் தங்கி உள்ளனர். அந்த முகாமுக்குள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிகளால் சரமாரியாக சுடும் சத்தம் கேட்டது. உள்ளே பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்துகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டது.

உடனே, ராணுவத்தின் அதிவிரைவுப்படை முடுக்கி விடப்பட்டது. அப்படையினர் முகாமுக்குள் நுழைந்தனர். முகாமை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால், பயங்கரவாதிகள் யாரும் உள்ளே இல்லை. 4 ராணுவ வீரர்கள் உடலில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தனர். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பீரங்கி படைப்பிரிவை சேர்ந்த சாகர் பன்னே (வயது 25), கமலேஷ் (24), யோகேஷ்குமார் (24), சந்தோஷ் நகரல் (25) ஆகிய நான்கு வீரர்கள் உயிரிழந்ததாக ராணுவம் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

ராணுவ வீரர்கள் சாப்பாட்டு கூடத்துக்கு பின்னால் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலில் உயிர் இழந்தவர்களில் ஒருவரான கமலேஷின் சொந்த ஊர் சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே உள்ள பெரிய வனவாசி மசக்காளியூர் பனங்காடு பகுதி ஆகும்.

இவருடைய தந்தை ரவி நெசவு தொழிலாளி ஆவார். தாயார் செல்வமணி. இவர்களின் 2-வது மகனான கமலேஷ் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் சேர்ந்தார். திருமணம் ஆகாத நிலையில், பஞ்சாப்பில் உள்ள பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.

ராணுவ வீரர் கமலேஷ் இறந்து விட்டதாக நேற்று (ஏப்ரல் 12) மதியம் 1 மணி அளவில் தகவல் வந்தது. எப்படி தாக்குதல் நடந்தது, எப்படி அவர் உயிரிழந்தார் என்பது குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. முன்னதாக அவர் பணியாற்றும் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்தி வெளியானதும் கமலேஷ் உள்ளிட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என நினைத்தோம். ஆனால் அவர் இறந்துவிட்டதாக செய்து வந்துள்ளது பெரும் வேதனையை அளிக்கிறது என அவரது அண்ணன் தெரிவித்துள்ளார்.

மேலும், கமலேஷ் ராணுவத்தில் சேருவதற்கு மிகவும் ஆர்வமாக இருந்ததாகவும், அதனால் அவர் என்சிசியில் எல்லாம் சேர்ந்திருந்ததாகவும், போலீசில் சேரும்படி குடும்பத்தினர் கூறியும் கேட்காமல் அவர் விருப்பப்பட்டு ராணுவத்தில் சேர்ந்ததாக அவரது அண்ணன் தெரிவித்தார். ராணுவ வீரர் கமலேஷின் இறப்பு அவரின் சொந்த ஊரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கமலேஷின் உடல் கொண்டுவரப்பட்டதும் இறுதிச் சடங்குகள் சொந்த ஊரிலேயே நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ரூ.100 கோடி மதிப்பிலான சொத்து மோசடி.. பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் மகன் மீது புகார்!

Last Updated : Apr 13, 2023, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.