ETV Bharat / state

அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார் - EPS-ன் முழு பேட்டி!

author img

By

Published : Apr 16, 2023, 12:39 PM IST

சேலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார் எனவும், தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார் எனவும், முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேளுங்கள் பதில் சொல்லுகிறேன் என்றும்; அண்ணாமலை பற்றிப் பேச தயாராக இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Edappadi Palaniswami said in Salem that Annamalai scandal report is to highlight him and he does not want to talk about him
அண்ணாமலை ஊழல் அறிக்கை வெளியிடுவது அவரை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காக எனவும், அவரைப் பற்றி பேச விரும்பவில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்துள்ளார்

அண்ணாமலை பற்றி பேச விரும்பவில்லை என எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தெரிவித்துள்ளார்

சேலம்: 'ஓ.பன்னீர்செல்வம் நடத்திய தர்மயுத்தம் என்னவென்று அதிமுகவினர் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். அவரது கருத்துகளை பொருட்படுத்த வேண்டாம். அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று பேசுகிறார், அவரைப் பற்றி பேசத் தயாராக இல்லை' என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அடுத்த ஓமலூரில் உள்ள அதிமுக சேலம் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியினருடன் நேற்று ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் புறநகர் மாவட்டச்செயலாளர் இளங்கோவன், முன்னாள் எம்.எல்.ஏக்கள், எம்.பி.கள் உள்ளிட்ட முக்கியப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் பங்கெடுப்பது குறித்தும், அதிமுகவில் அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், “பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஊழல் பட்டியல் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை. பத்திரிக்கைகளில் சொத்துப்பட்டியல் வெளியிட்டது குறித்து பார்த்தேன். அதிமுக குறித்து அவர் வெளியிடட்டும் பார்க்கலாம். கர்நாடகத் தேர்தல் குறித்து சென்னையில் நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

டிடிவி தினகரன் அதிமுகவின் ஊழல் பட்டியலை வெளியிட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். முதலில் அவரது சொத்துப் பட்டியலை வெளியிடட்டும். லண்டனில் அவருக்கு சொத்து இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அதை கண்டுபிடித்து அரசு உடைமையாக்கிட வேண்டும். ஆட்சியில் இருந்தாலே ஊழல் செய்திருக்கிறார்கள் என்று அர்த்தமில்லை. அதிமுக வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல், சிலர் வதந்தி பரப்புகிறார்கள். அண்ணாமலை பற்றிய கற்பனையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாது.

விரக்தியின் விளிம்பில் ஓபிஎஸ் பேசி வருகிறார். அவரது கருத்தை கண்டுகொள்ளத் தேவையில்லை. முதலில் தர்மயுத்தம் என்றார். இப்போதும் தர்மயுத்தம் என்கிறார். அவரது தர்மயுத்தம் என்ன என்பதை அதிமுக தொண்டர்கள் புரிந்துகொண்டார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவை வலுப்படுத்துவோம் என சசிகலா சொல்வதை பொருட்படுத்த தேவையில்லை. சசிகலா சட்டப்பேரவைத்தேர்தலின்போது அரசியலில் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகழின் அடிப்படையில் 66 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றனர். இவ்வளவு பேர் வெற்றி பெறுவார்கள் என அவர் எதிர்பார்க்கவில்லை. வெற்றி கிடைத்து அதிமுக வளர்ச்சியில் இருப்பதைப் பார்த்து இப்போது இதுபோல சொல்லி வருகிறார். தமிழ்நாட்டில் நடந்து கொண்டு இருப்பது திறமையற்ற அரசாங்கம்.

பெரியகுளத்தில் காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லை. நிகழ்ச்சி நடக்கும்போது உரிய பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் தரப்படவில்லை. முதலமைச்சருக்கு மட்டுமே போலீஸ் பாதுகாப்பு வழங்குகிறது. மற்றவர்களுக்கு தரப்படவில்லை. திமுக அரசு செயலிழந்து விட்டது.

அண்ணாமலை பேட்டி கொடுத்து பெரிய ஆளாக நினைக்கிறார். நான் 50 வருடமாக அரசியலில் இருக்கிறேன். கட்சியில் இருப்பவருக்கு அடிப்படைத்தன்மை தெரியவேண்டும். அவரைப் பற்றி பேசத் தயாராக இல்லை. தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதற்காகப் பேசுகிறார். முதிர்ந்த அரசியல்வாதி பற்றி கேளுங்கள். பதில் சொல்கிறேன். என்னிடம் அவரைப் பற்றி கேட்க வேண்டாம்.

டெல்லி மதுபானக் கொள்கை, சிபிஐ பற்றி எனக்குத் தெரியாது. நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன். எனக்கு அதைப் பற்றித் தெரியாது. அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவக் கல்லூரி கட்டுமானத்தில் ஊழல் நடைபெறவில்லை. திமுக அரசு வந்ததும், என்னைச் சுற்றி சுற்றி வந்தார்கள். என்னிடம் வேறு எதுவும் கிடைக்காததால் மருத்துவக் கல்லூரி பிரச்னையைக் கிளப்புகிறார்கள்.

அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் கட்டடம் கட்டப்பட்டது. 45 சதவீதம் திமுக ஆட்சியில் கட்டப்பட்டது. கட்டுமான முடிவுச் சான்றிதழை அவர்கள் தான் கொடுத்து இருக்கிறார்கள். இப்போது இதுகுறித்து கேட்டால் என்னைப் போலவே முதலமைச்சரும் பதில் சொல்லியாக வேண்டும். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு முதலமைச்சர் தவறு செய்கிறார்.

என் மீது பழி சொல்வதற்காக வேண்டும் என்றே அதிகாரிகள் சொல்வதை முதலமைச்சர் கேட்கிறார். எப்படியாவது என் மீது வழக்குப் போட வேண்டும் என்பதற்காகச் சொல்கிறார்கள். எதிர்க்கட்சிகளுக்கு கிடைக்கும் தகவல் அடிப்படையில்தான் சட்டப்பேரவையில் பேசுகிறோம். சட்டப்பேரவை மசோதா குறித்து முடிவெடுப்பதற்கு ஆளுநருக்கு மட்டும் காலக்கெடு விதிக்க நினைக்கும் திமுக, சட்டப்பேரவையில் நான் பேசுவதை தொலைக்காட்சியில் காட்ட மறுக்கிறார்கள்.

நாட்டு மக்களின் பிரச்னையை சொல்கிறோம். எதிர்க்கட்சிகள் சொல்லும் பிரச்னையை கவனித்து சரி செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் ஜனநாயகம் இல்லை. நான் பேசுவது பத்திரிகைகளில் வருகிறது. ஏன் நேரடி ஒளிபரப்பு செய்வதில்லை. அதிமுக பிரதான எதிர்க்கட்சி. ஆனால், நாங்கள் சொல்லும் பிரச்னையை மக்கள் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக வேண்டும் என்றே செய்கிறார்கள். ஜனநாயகம் பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதியே கிடையாது” என்று கூறினார்.

இதையும் படிங்க: 'சாராய அமைச்சர் சரக்கு போட்டுப் பேசி இருப்பார்' - திருச்சியில் அண்ணாமலை பரபரப்பு பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.