ETV Bharat / state

ஓமலூர் அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு - விசிக போராட்டம்

author img

By

Published : Dec 12, 2021, 12:38 PM IST

சேலம் ஓமலூர் அருகே உள்ள அம்பேத்கர் சிலையை உடைத்த அடையாளம் தெரியாத நபர்களை கண்டுபிடித்து கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கர் சிலை உடைப்பு
அம்பேத்கர் சிலை உடைப்பு

சேலம்: ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் பகுதியில் நாலுகால் பாலம் செல்லும் வழியில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று இரவு (டிச.11) அடையாளம் தெரியாத நபர்கள் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இன்று (டிச.12) காலை சிலை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓமலூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடைக்கப்பட்ட சிலையை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டதை அறிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், சிலை உடைப்புக்கு காரணமானவர்களை கைது செய்து மீண்டும் அதே இடத்தில் சிலை புதுப்பித்து நிறுவப்பட வேண்டும் என வலியுறுத்தி சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது மரங்களை வெட்டி சாலையின் குறுக்கே போட்டு தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த ஓமலூர் தாசில்தார், காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு செலவில் உடைக்கப்பட்ட அம்பேத்கர் சிலை புதுப்பித்து அதே இடத்தில் நிறுவப்படும் என்று உறுதியளித்தனர்.

இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: தமிழ்நாடு டிஜிபி கையிலிருந்து காவல்துறை நழுவி விட்டது - அண்ணாமலை குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.