ETV Bharat / state

வேங்கைவயல் விவகாரம்: 11 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவு!

author img

By

Published : Apr 20, 2023, 7:16 PM IST

வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

DNA check up
டிஎன்ஏ பரிசோதனை

டிஎன்ஏ பரிசோதனை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், இறையூர் ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டியில் மலம் கலந்ததாகப் புகார் எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

கடந்த 105 நாட்களாக, சிபிசிஐடி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். குறிப்பாக இறையூர், வேங்கைவயல், காவேரி நகர், கீழ முத்துக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 147 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே தமிழ்நாடு அரசு, நீதிபதி சத்தியமூர்த்தி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.

இந்நிலையில் சிபிசிஐடி காவல்துறையினர் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு கூடுதல் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தனர். அந்த மனுவில், "நாங்கள் கடந்த 105 தினங்களாக 147 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மலம் கலந்த தண்ணீரை சோதனை செய்துள்ளோம். சந்தேகத்தின் அடிப்படையில், 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என வலியுறுத்தப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்யா, 11 பேரிடம் டிஎன்ஏ சோதனை நடத்த உத்தரவிட்டார். புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி உதவி பேராசிரியர் தலைமையில் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ள நீதிபதி, பார்த்திபன் என்பவரை இதற்கு அதிகாரியாக நியமிப்பதாக அறிவித்துள்ளார். இதன் அடிப்படையில், வேங்கைவயல் பகுதியை சேர்ந்த 9 பேரிடமும், காவேரி நகர், கீழ முத்துக்காடு பகுதியைச் சேர்ந்த தலா ஒருவரிடமும் டிஎன்ஏ பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

குடிக்கும் தண்ணீரில் மலம் கலந்த விவகாரத்தில், இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை என வேங்கைவயல் கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: வேங்கை வயல் சம்பவத்தில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க துரித நடவடிக்கை - முதலமைச்சர் பேச்சு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.