ETV Bharat / state

புதுக்கோட்டை: கடலில் தவறிவிழுந்து உயிரிழந்த மீனவரின் உடல் நல்லடக்கம்

author img

By

Published : Jun 29, 2021, 7:53 AM IST

கடலில் தவறிவிழுந்து உயிரிழந்த வடக்கு புதுக்குடியைச் சேர்ந்த மீனவரின் உடல், இரண்டு நாள்கள் தேடுதலுக்குப் பிறகு கடலிலிருந்து நேற்று மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

உயிரிழந்த மீனவர் வசீகரன் (19)
உயிரிழந்த மீனவர் வசீகரன் (19)

புதுக்கோட்டை: கொடிக்குளம் ஊராட்சி வடக்கு புதுக்குடி மீனவ கிராமத்தைச் சேர்ந்தவர் வசீகரன் (19). இவர் அதே பகுதியைச் சேர்ந்த தினமணி (46), மணிகண்டன் (23) ஆகியோரோடு கடந்த 26ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார். கரையிலிருந்து 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீனவர்கள், மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மீனவர் வசீகரன், படகின் இன்ஜின் பக்கம் அமர்ந்து வலையில் சிக்கிய மீன்களை எடுக்க முயற்சித்திருக்கிறார். இதில் எதிர்பாராதவிதமாக வலை இன்ஜின் மீது சிக்கி, வசீகரன் வலையோடு தூக்கிவீசப்பட்டுள்ளார். தூக்கி வீசப்பட்ட வசீகரன் எஞ்ஜின் மீதே மோதி, தலைப் பகுதியில் லேசான காயத்துடன் படகிலிருந்து தவறி கடலில் விழுந்தார்.

அதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலில் குதித்து வசீகரனைத் தேடியுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் தேடியும் கிடைக்காததையடுத்து, கடலோரக் காவல் படையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்த கடலோரக் காவல் படையினர், சக மீனவர்களின் உதவியோடு இரண்டு விசைப்படகு, இருபதுக்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தொடர்ந்து இரண்டு நாள்களாகத் தேடுதல் பணி நடைபெற்றுவந்தது.

இந்நிலையில் நேற்று (ஜூன் 28) காலை மீனவர் வசீகரனின் உடல் கடலிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. பின்னர் மீனவரின் உடல் கரைக்கு கொண்டுவரப்பட்டு, உடற்கூராய்விற்குப் பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

வசீகரனின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுதது காண்போரை சோகத்துக்குள்ளாக்கியது. இதில் சார் ஆட்சியர் ஆனந்த்மோகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கடல் அலைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.