ETV Bharat / state

தீபாவளி விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்… உள்நாடு டூ வெளிநாடு ஏற்றுமதி என உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 4, 2023, 2:12 PM IST

Diwali sweets: திணை வகைகள், சிறுதானியங்கள் உள்ளிட்ட பாரம்பரிய முறையில் செய்யப்பட்ட பலகாரங்களுக்கு இந்த ஆண்டு அதிக வரவேற்பு கிடைத்து உள்ளதாக புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தி கம்பெனி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்
தீபாவளியை முன்னிட்டு விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்

தீபாவளியை முன்னிட்டு விற்பனையில் களைகட்டும் பாரம்பரிய இனிப்பு பலகாரங்கள்

புதுக்கோட்டை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து இனிப்பு கடைகளிலும் பலகாரம் உற்பத்தி மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இளைய தலைமுறையினருக்கு உடல் ஆரோக்கியத்தை பேணும் வகையில் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய திணை வகைகள், சிறுதானியங்களை கொண்டு விதவிதமாக முறுக்கு, அதிரசம், லட்டு போன்ற பலகாரங்களை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர் புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர்கள்.

இந்த நிறுவனம் பாரம்பரியத்தையும், பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களையும் இளைய தலைமுறைக்கு கொண்டுசெல்லப்பட வேண்டும் என்ற நோக்கத்திலும், விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும் என்ற நோக்கத்திலும் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சிறுதானியங்களான வரகு, தினை, சாமை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்களில் இத்தலைமுறைக்கும் பிடித்த வகையில் முறுக்கு, மிக்சர், அதிரசம் போன்ற பல்வேறு வகையான சிறுதானிய தின்பண்டங்களை தயாரித்து பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனை செய்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 1,364 விவசாயிகளை ஒன்றிணைத்து இயங்கி வரும் விவசாய உற்பத்தியாளர் கம்பெனியில் விவசாயிகளிடமிருந்து அவர்கள் வயல்களில் விளைவிக்கப்படும் பாரம்பரிய நெல், சிறுதானிய பயிர்கள் பெற்று அதற்கு மதிப்பு கூட்டப்பட்டு மார்க்கெட்டுகளுக்கு சென்று விற்கப்படுகிறது.

பலகார வகைகள்: தினை அதிரசம், கவுனி அதிரசம், தினை மிக்சர், வரகு மிக்சர்,வரகு முறுக்கு, தினை முறுக்கு, கவுனி முறுக்கு, ராகி முறுக்கு, மாப்பிள்ளைச்சம்பா முறுக்கு, தூயமல்லி முறுக்கு, தினை மனோவளம், கம்பு லட்டு, தினை லட்டு, ராகி லட்டு, மாப்பிள்ளைச்சம்பா லட்டு, கருப்பு உளுந்து லட்டு, பாசிப்பயறு லட்டு, தினை காராசேவு, வரகு காராசேவு என சிறுதானிய மற்றும் பாரம்பரிய அரிசியில் செய்த திண்பண்டங்கள் என பல்வேறு வகையான சிறுதானிய உணவு வகைகளை தயாரித்து விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தி கம்பெனி நிர்வாக குழு உறுப்பினர் ஆதப்பன் கூறுகையில், "இந்த வருடம் அதிக அளவு வரவேற்பு கொடுத்த பலகாரம் மனோளம் (காராசேவில் வெல்லம் கலந்த பலகாரம்). செயற்கை சாயம், வெள்ளை சர்க்கரை, மைதா மாவு, பதப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் என உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எவ்விதமான செயற்கை பொருட்களும் பயன்படுத்ததில்லை.

புதுக்கோட்டை டூ வெளிநாடு: சுத்தமான நாட்டுக் கடலையில் எடுக்கப்பட்ட கடலை எண்ணெய், நாட்டுச்சர்க்கரை, பனை கருப்பட்டி கொண்டு அனைத்து தின்பண்டங்களும் தயாரித்து வருகிறோம். இத்திண்பண்டங்கள், தமிழ்நாடு மட்டுமல்லாது கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மஹாராஸ்டிரா, டெல்லி போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் மற்றும் தமிழர்கள் வாழக்கூடிய வெளிநாட்டுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர்கள் விரும்பி அருந்திய கம்மங்கூழ், கேப்பை கூழ், கவுனி அரிசி போன்ற உடலுக்கு சக்தி தரக்கூடிய எந்த ஒரு உணவையும் தற்போதுள்ள குழந்தைகள் விரும்பாத சூழலில், அதே சத்துள்ள கேப்பை, கம்பு, சிறுதானியங்கள், முளைகட்டிய பயிர் வகைகள், திணை வகைகள் பாரம்பரிய நெல் வகைகளை கொண்டு தின்பண்டங்களை விற்பனை செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்நிலையில் தற்போது தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பல்வேறு பலகார வகைகள் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் இந்நிறுவனத்தின் மூலம் ஏராளமான பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், அதனால் அவர்களது வாழ்வாதாரம் சிறப்பாக உள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: "அன்னைக்கு எங்க வீடுகளில் கஞ்சி மட்டும்தான்" 60 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாடாத விநோத கிராமங்கள்.. சிவகங்கையில் நடப்பது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.