புதுக்கோட்டை மாவட்டம் கீழாநெல்லிக் கோட்டையில் தனியாருக்கு சொந்தமான வானப்பட்டறை இயங்கி வந்தது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வானப் பட்டறையில் வெடி விபத்து ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த வெடிமருந்து தயாரிக்கும் கம்பெனி மூடப்பட்டது.
மீண்டும் அதே இடத்தில் வானப்பட்டறையை இயக்குவதற்கு முயற்சித்தனர். அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுவும் அளித்தனர். இதனையறிந்த அவர்கள் அப்பகுதியில் உள்ள மக்களை மிரட்டினர். இந்நிலையில் நள்ளிரவு திடீரென்று அப்பகுதியில் வெடிகுண்டு வீசப்பட்டது. இந்தக் குண்டு வீச்சால் அங்கிருந்த சில வீடுகள் சேதமடைந்தன.
![crakers_blast](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-02-keelanellikottai-crakers-blast-visual-scr-img-7204435_27102020140010_2710f_1603787410_409.jpg)
வெடிகுண்டு சத்தம் கேட்டதும் அப்பகுதி மக்கள் வெடிகுண்டு வீசியவர்களை மடக்கிப் பிடித்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்கள் வானப்பட்டறை நடத்தி வந்த விக்னேஷ் மற்றும் விஜயகுமார் என்பது தெரியவந்தது. அவர்களை அங்கிருந்த ஒரு வீட்டில் அடைத்து வைத்துவிட்டு காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
![damaged house](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-pdk-02-keelanellikottai-crakers-blast-visual-scr-img-7204435_27102020140010_2710f_1603787410_824.jpg)
பின்னர் இருவரும் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். இது குறித்து கே.புதுப்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:பிகாரில் கையெறி குண்டுகள் வைத்திருந்த நபர் கைது!