நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி பகுதியில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை நாமக்கல் சாலையில் செயல்பட்டு வருகிறது. நேற்று (ஆகஸ்ட் 22) இரவு விற்பனையை முடித்த அந்த கடையில் பணிபுரியும் கடையின் மேற்பார்வையாளர் ராமலிங்கம், விற்பனையாளர்கள் ராஜேந்திரன், சிவக்குமார் ஆகியோர் கணக்கு வழக்கு பார்த்து விட்டு அங்கிருந்து கிளம்பியபோது இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்கள், ஊழியர்கள் மீது மிளகாய் பொடி தூவியும், கத்தியால் தாக்கியும் அவர்களிடமிருந்த 3 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றதாக ஊழியர்கள் வேலகவுண்டன்பட்டி காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.
இந்த சம்பவம் குறித்து டாஸ்மாக் ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில், வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவு முழுவதும் டாஸ்மாக் கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் மீண்டும் இன்று (ஆகஸ்டு 23) காலை அவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். சனிக்கிழமை என்பதால் டாஸ்மாக் கடையில் அதிகளவு விற்பனை நடந்துள்ளதை அறிந்து கொள்ளை சம்பவம் நடைபெற்றதா? அல்லது ஊழியர்களே பணம் கொள்ளை போனதாக நாடகம் ஆடுகிறார்களா? என காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்