ETV Bharat / state

பெட்டியைத் தூக்கிச் சென்ற மிஸ்டர் எக்ஸ் - ரேஷன் கடை லாரிகளுக்கான டெண்டர் ரத்து!

author img

By

Published : Feb 8, 2023, 6:36 PM IST

நாமக்கல்லில் டெண்டருக்கு வைத்திருந்த பெட்டியை மர்ம நபர்கள் தூக்கிக் கொண்டு ஓட்டம் பிடித்ததால்,ரேசன் கடைகளுக்கு பொருட்களை எடுத்துச்செல்லும் வாடகை லாரிகளுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ரேஷன் கடை டெண்டர் விவகாரம்...நாமக்கல்- ரேஷன் வாடகை லாரி டெண்டர் ரத்து!
ரேஷன் கடை டெண்டர் விவகாரம்...நாமக்கல்- ரேஷன் வாடகை லாரி டெண்டர் ரத்து!

பெட்டியைத் தூக்கிச் சென்ற மிஸ்டர் எக்ஸ் - ரேஷன் கடை லாரிகளுக்கான டெண்டர் ரத்து!

நாமக்கல்: நாமக்கல் - திருச்சி பிரதான சாலையில் குப்பம்பாளையம் என்ற இடத்தில் குடிமைப் பொருட்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் இருந்து நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், பரமத்தி வேலூர் தாலுகாவில் உள்ள 424 நியாயவிலைக்கடை கடைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில், 25 லாரிகள் மூலம் ரேஷன் பொருட்கள் எடுத்துச்சென்று விநியோகம் செய்யப்படுகிறது.

2023-24ஆம் ஆண்டுக்கான லாரி ஒப்பந்த விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள விரும்பும் லாரி உரிமையாளர்கள் நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள டெண்டர் பெட்டிகளில் நேற்று (7-2-2023) மாலை 5 மணி முதல் இன்று (8-2-2023) காலை 10.30 மணி வரை டெண்டர் படிவத்தைப் பூர்த்தி செய்து அந்த பெட்டியில் போடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

டெண்டரில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்து ஏராளமான லாரி உரிமையாளர்கள் அந்தப் பெட்டியில் தங்களது விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து பெட்டியில் போட வந்திருந்தனர். ஆனால், பெட்டி 10.30 மணியாகியும் பூட்டாமல் இருந்தது. டெண்டருக்கு வந்திருந்தவர்கள் பெட்டியைப் பூட்டுமாறு கூறப்பட்ட பின் 10.30 மணிக்கு மேல் பெட்டி பூட்டப்பட்டது. காலை 11.00-க்குப் பின்னர், டெண்டர் பெட்டி திறக்கப்பட்டு டெண்டர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

லாரி உரிமையாளர்கள் விண்ணப்ப படிவத்தை பெட்டிக்குள் போட முற்பட்டபோது, நாமக்கல் தாலுகாவிற்கு உட்பட்ட டெண்டர் பெட்டியை மட்டும் அலுவலகத்திற்கு திடீரென வந்த மர்ம நபர்கள் சிலர், அதிகாரிகள் கண் முன்னே பெட்டியைத் தூக்கிக்கொண்டு போனதைக்கண்டு டெண்டருக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது, எந்தவித பதிலும் அளிக்காததால் ஆத்திரமடைந்த லாரி உரிமையாளர்கள் அலுவலகத்தின் உள்ளேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த டெண்டர் நிர்வாக காரணத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது எனச் சங்க வளாகத்தில் உள்ள அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. டெண்டர் பெட்டியை மர்ம நபர்கள் தூக்கிக் கொண்டு ஓடிய வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:துருக்கி நிலநடுக்கங்கள் : மோப்ப நாய்களுடன் மீட்புப்படையை அனுப்பிய இந்தியா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.