மருத்துவப் படிப்பிற்கு நீட் தேர்வு அவசியமானதால்பன்னிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கோடை விடுமுறையில் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பெற்றோர் எவ்வளவு பணம் செலவழித்தாலும் பரவாயில்லை என்று நீட் பயிற்சி மையங்களைத் தேடிசேர்க்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு செல்லும் சாலையில் தனியார் சி.எம்.எஸ். கல்வி நிறுவனங்கள் அமைந்துள்ளன. இங்கு ஸ்பைரோ நீட் பயிற்சி மையம் செயல்பட்டுவருகிறது.
இந்த பயிற்சி மையமானது ஒரு சில தனியார் பள்ளிகளில் படிக்கும்மாணவ-மாணவியரின் பெற்றோரின் அலைபேசி எண்ணிற்குத் தொடர்புகொண்டு, தங்களது நீட் பயிற்சி மையத்தை பற்றி குறுஞ்செய்தி அனுப்பிவிடுகின்றனர்.
பெற்றோர் அந்த எண்ணிற்கு தொடர்புகொண்டபோது, தனியார் மண்டபத்தில் தங்களது பயிற்சி மையத்தின் அறிமுகக் கூட்டம் நடைபெறுகிறது. அங்கு வந்து தங்களது சந்தேகங்களை தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அங்கு தங்களது பிள்ளைகளுடன் சென்று பார்த்தபோது ஸ்பைரோ நீட் பயிற்சி மையமானது உலகத் தரத்தில் கல்வி கற்பிக்கப்படுகிறது.
முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியர் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகிறது. இந்த கல்வியாண்டில் 500மாணவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதாகவும் தங்கள் மையத்திலிருந்து பலர் மருத்துவப் படிப்பிற்கு தேர்வாகி உள்ளனர். தங்கள் பிள்ளைகளுக்கும் இதுபோன்று உலகத்தரத்தில் படித்து மருத்துவ படிப்பை நினைவாக்கிட முடியும் என ஆசைவார்த்தை கூறியதாக பெற்றோர் தெரிவித்தனர்.
மேலும், சத்தான உணவு, சுத்தமான விடுதி வசதி உள்ளது என கூறியதாகவும், இதனை நம்பி தங்களின் பிள்ளைகளை இந்த நீட் பயிற்சி மையத்தில் 46 ஆயிரம் ரூபாய் செலுத்தி உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1500 மாணவ-மாணவிகள் இங்கு சேர்ந்துள்ளனர்.
ஆனால், நிர்வாகம் அறிவித்த எந்த வசதியும் இங்கு இல்லாததால் மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். கழிவறையில் தண்ணீர் கிடையாது, உணவில் புழுக்கள், வண்டுகள் போன்றவை உள்ளது எனவும், முறையாக வகுப்புகள் நடத்தப்படாமலும் ஒரு அறையில் 24 மாணவர் தங்க வைக்கப்படாவதாகவும்,1500 மாணவ மாணவியருக்கு வெறும் 40 கழிவறைகள் உள்ளதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இருப்பினும் பத்து நாட்கள் கடந்த நிலையில் இது குறித்து மாணவர்கள் தங்களது பெற்றோருக்கு புகார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பெற்றோர் நிர்வாகத்திடம் கேட்டபோது முறையாக பதிலளிக்கவில்லை. இதனால் தங்களது பணத்தை திருப்பி தரும்படி பெற்றோர் கேட்டபோது, ஸ்பைரோ நீட் பயிற்சி மையம் மறுத்துள்ளனர். நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பிறகு ஒருவழியாக பணத்தை திருப்பிக் கொடுக்க நிர்வாகிகள் ஒப்புக்கொண்டனர். பணத்தை அவர்களது வங்கி கணக்கில் செலுத்துவதாக, பெற்றோரின் வங்கி கணக்கு எண்ணை வாங்கி வைத்துக்கொண்டனர்.
இதன் காரணமாக 1,500 மாணவரின் பெற்றோர் தங்களது பிள்ளைகளை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச்சென்றனர்.இதனால் திருச்செங்கோடு சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.