ETV Bharat / state

திருமணத்தை மீறிய உறவு: நாமக்கல்லில் நிகழ்ந்த கொடூரக் கொலை வழக்கில் 4 பேர் கைது

author img

By

Published : Feb 2, 2021, 7:09 PM IST

நாமக்கல்: திருமணத்தை மீறிய உறவில் ஈடுபட்ட தாயின் காதலனை அடித்தே கொன்ற மகன் உள்பட நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

extra marital affair
திருமணத்தை மீறிய உறவு

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரின் கந்தம்பாளையம் அருகே அமைந்திருக்கும் மயானம் அருகில் நேற்று (பிப்.7) ஆண் சடலம் ஒன்று சாக்குமூட்டையில் அழுகிய நிலையில் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த உடலை மீட்டு உடற்கூராய்விற்காக அனுப்பிவைத்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர் பரமத்திவேலூரில் உள்ள சோழசிராமணி பகுதியில் இறைச்சி கடை வைத்திருந்த சரவணன் (36) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். சரவணன் தன்னை விட 8 வயது மூத்தப் பெண்ணான செட்டியாம்பாளையத்தை சேர்ந்த கீதாவுடன் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

கீதாவின் கணவர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், இளைய மகள் ஷாலினியை தமிழ்ச்செல்வன் என்பவருக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு மகன் இளவரசன் (19) உடன் வசித்து வந்துள்ளார். இளவரசனுக்கு தாயின் திருமணத்தை மீறிய உறவில் விருப்பமில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் சரவணனையும், தாய் கீதாவையும் பல முறை கண்டித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி இரவில் குடிபோதையில் சரவணன் கீதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மகனிடம் கீதா தெரிவித்ததையடுத்து, ஆத்திரமடைந்த இளவரசன் சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் சரமாரியாக தாக்கியுள்ளார்.

இத்தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்து சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத தாயும், மகனும் செய்வதறியாது தனது மகளின் கணவர் தமிழ்செல்வனிடம் சம்பவம் குறித்து தகவல் அளித்துள்ளனர். தமிழ்ச்செல்வனும், அவர் நண்பர் பிரபாகரனும் சம்பவ இடத்திற்கு ஆம்னி வேனில் சென்று சரவணனின் சடலத்தை ஒரு சாக்குப்பையில் கட்டியுள்ளனர்.

யாரும் அறியாத வண்ணம் கந்தம்பாளையத்தில் உள்ள ஆவாரங்காடு மயானம் அருகே சென்ற நால்வரும், அங்கு ஒரு மழைநீர் சேகரிப்பு குட்டையில் சடலத்தை வீசிவிட்டு தப்பினர். தனிப்படை அமைக்கப்பட்டதால் சரவணனின் கொலை பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தீவிர விசாரணையில் சிக்கிய நால்வரும், நல்லூர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு, பரமத்திவேலூர் நடுவர் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:பெங்களூரு ஏடிஎம் தாக்குதல் குற்றவாளிக்கு 12 ஆண்டு சிறை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.