ETV Bharat / state

கொட்டும் மழையில் வெள்ளம் பாதித்த இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்

author img

By

Published : Dec 8, 2020, 7:27 PM IST

மயிலாடுதுறை அருகே புயல், வெள்ளதால் பாதிக்கப்பட்ட இடங்களை அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ்.மணியன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்

மயிலாடுதுறை : நிவர்,புரெவி புயல் என அடுத்தடுத்த புயல்களால் பெய்த கனமழை காரணமாக தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து புயல், வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை, முதலமைச்சர், அமைச்சர்கள் அவ்வபோது ஆய்வு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 60 ஆயிரம் ஹெக்டேர் விளைநிளத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகள், வெள்ள நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இந்நிலையில், பாதிப்பு பகுதிகளை ஆய்வு செய்வதற்காக, முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் இரண்டாவது நாளாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்த அமைச்சர்கள்

முன்னதாக, மயிலாடுதுறை அருகே மொழையூர் கிராம பகுதியில் பயிர் சேதங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வுசெய்த நிலையில், அதேபகுதிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் இன்று (டிசம்பர் 8) ஆய்வு செய்தனர். ஆய்வின்போது மழை பெய்த நிலையில், அதை பொருட்படுத்தாது பயிர் சேதங்களை ஆய்வு செய்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ். மணியன், " நாளை முதலமைச்சர் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் நல்லாடை, மொழையூர், சீர்காழி ஆகிய பகுதிகளில் வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு பொதுமக்களின் கருத்தை கேட்கவுள்ளார்" என்றார்.

மேலும், அய்யாவையனாற்றில் தொடர்ந்து உடைப்பு ஏற்படுவதாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், "கடந்த ஆண்டு எந்தெந்த ஆறுகளை தூர்வார வேண்டும், மதகுகளை சீரமைக்க வேண்டும் என்று கருத்துகள் கேட்கப்பட்டு குடிமராமத்து திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்போடு தூர்வாரும் பணிகள் நடைபெற்றன. ஏதேனும் தூர்வாராமல் விடுபட்டிருந்தால் அவை இந்த ஆண்டு சரிசெய்யப்படும்" என்றார்.

இதனையடுத்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "குடிமராமத்து பணி திட்டம் கரிகாலசோழ மன்னனின் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளிளால்தான் ஆறுகள் தூர்வாரப்பட்டுள்ளன. 70 ஆண்டுகளாக தூர்வாரப்படாத மிகப்பெரிய அணைகள் தூர்வாரப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் குடிமராமத்து திட்டத்தால் அதிகளவில் தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. வெள்ள பாதிப்புகளுக்கு உரிய நிவாரணத்தை முதலமைச்சர் வழங்குவார். இந்த ஆண்டு விடுபட்ட இடங்கள் தண்ணீர் வடிந்தவுடன் தூர்வாரப்படும்" என்றார். இந்த ஆய்வின்போது நாகை மாவட்ட ஆட்சியர் பிரவின்நாயர், சட்டமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், பவுன்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: மழைநீரோடு புகுந்த மலை பாம்பு: வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.