ETV Bharat / state

4 நாட்களாக நடைபெற்று வந்த மீனவர்களின் மறியல் போராட்டம் வாபஸ்... விடாமல் எச்சரித்த மீனவர்கள்

author img

By

Published : Aug 4, 2023, 10:02 PM IST

சுருக்கு மடி, அதிவேக இன்ஜின் ஆகியவற்றைத் தடை செய்யக்கோரி நான்கு நாட்களாக நடந்த போராட்டத்தை கைவிட்டதோடு, நடவடிக்கை எடுக்காவிட்டால் மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat

மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: தரங்கம்பாடி மீனவ கிராமம் அருகே கடலில் கடந்த மாதம் 31ஆம் தேதி தடை செய்யப்பட்ட சுருக்கு மடி வலையைப் பயன்படுத்தி மீன் பிடித்ததாக சந்திரபாடி மீனவ கிராமத்தின் பைபர் படகை சிறைபிடித்து துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். இப்பிரச்சனை தொடர்பாக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சுருக்குமடி வலையை முற்றிலுமாக தடை செய்யக்கோரி அம்மாவட்ட தலைமை கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமம் தலைமையில், சின்னூர்‌பேட்டை, குட்டியாண்டியூர், வெள்ளக்கோயில், பெருமாள் பேட்டை, புதுப்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, வானகிரி, நாயக்கர் குப்பம், கீழமூவர்கரை, மேலமூவர்கரை, தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 21 மீனவக் கிராமங்கள் தொடர் தொழில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நான்காவது நாளாக இன்று (ஆகஸ்ட் 04) வரை போராட்டம் தொடர்ந்தது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியில் சுருக்குமடி வலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, சுருக்குமடி வலையை முற்றிலும் தடை செய்ய வலியுறுத்துவது தொடர்பாக 9 மாவட்ட மீனவர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. தரங்கம்பாடி தலைமை மீனவகிராமம் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மயிலாடுதுறை, கடலூர், புதுச்சேரி, காரைக்கால், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 9 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிங்க: "மதுவுக்கு எதிராக போராட திமுக எங்களுடன் வர வேண்டும்" - கனிமொழிக்கு அன்புமணி அழைப்பு

கூட்டத்தின் முடிவில், சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவிரைவு இன்ஜின் பொருத்தப்பட்ட விசைப் படகு இந்த மூன்றையும் நிரந்தரமாக தடை செய்ய வலியுறுத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளனர்.

மேலும் வருகின்ற 18ஆம் தேதி ராமநாதபுரத்தில் நடைபெறும் மீனவர் மாநாட்டில் கலந்து கொள்ளும் தமிழக முதலமைச்சரிடம், 9 மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் அனைவரும் நேரில் சென்று கோரிக்கை மனு அளிக்க வேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியரும், மீன் வளத்துறை அதிகாரிகளும் தடை செய்ய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் 9 மாவட்ட மீனவக்கிராமங்கள் ஒன்று கூடி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனத் தெரிவித்தனர்.

மேலும் தொடர்ந்து நான்கு நாட்களாக நடைபெற்று வந்த தொழில் மறியல் போராட்டத்தை திரும்ப பெற்றுக்கொள்வதாகவும், நாளை முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 21 மீனவ கிராமத்தினர் தொழிலுக்கு செல்வதாகவும் தலைமை மீனவ கிராமமான தரங்கம்பாடி மீனவ கிராமத்தைச் சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு - சுவாதி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து உயர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.