ETV Bharat / state

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் - இலங்கை கடலோர காவல் படை மீது வழக்கு?

author img

By

Published : Feb 24, 2023, 7:20 AM IST

மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்திய தாக்குதலில் 5 மீனவர்கள் பலத்த காயம் அடைந்த நிலையில், அவர்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை மற்றும் இழப்பீடு வழங்க அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவித்தார்.

மயிலாடுதுறை மீனவர்களுக்கு ஆட்சியர் நேரில் ஆறுதல்!
மயிலாடுதுறை மீனவர்களுக்கு ஆட்சியர் நேரில் ஆறுதல்!

மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர் அளித்த பேட்டி

மயிலாடுதுறை: தரங்கம்பாடியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் கடந்த 21ஆம் தேதி இரவு, அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், அருண் குமார், மாதவன், கார்த்தி, முருகன் ஆகியோருடன் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று (பிப்.23) அதிகாலை காரைக்காலின் தென்கிழக்கில் 44 நாட்டிகல் தொலைவில் கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்களின் வலையை பறித்துக் கொண்டனர். அது மட்டுமல்லாமல், அவர்களை இரும்பு ரோப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர். இதில் 5 மீனவர்கள் பலத்த காயம் அடைந்தனர். மேலும் அவர்களது உடலில் ரத்த கட்டுக்கள் ஏற்பட்டதுடன், ஒரு மீனவருக்கு லேசான எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து கரை திரும்பிய 6 மீனவர்கள் தரங்கம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சையை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து பொறையாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், படுகாயம் அடைந்த வேல்முருகன், பாலசுப்ரமணியன், கார்த்தி, அருண்குமார் மற்றும் மாதவன் ஆகிய 5 பேரும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது குறித்து மீனவர்கள் கூறுகையில், இந்திய எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தங்கள் மீது இலங்கை கடற்படையினர் 12 பேர் அடங்கிய குழுவினர் வந்து கொடூர தாக்குதல் நடத்தியதாகவும், தங்களிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை என்றும், பேச விடாமல் தாக்கியதாகவும், தங்களிடம் இருந்த படகு எஞ்சின், ஜிபிஎஸ் கருவி, வலைகள் மற்றும் 2 பேட்டரி ஆகியவற்றை பறித்துச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, “மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குப் பதிவு செய்ய கடலோர காவல் படை குழுமத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் குறித்தும், அவர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடுகள் குறித்தும் தமிழ்நாடு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டு, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கொடூரத் தாக்குதல் - 5 பேர் படுகாயம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.