நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடக்கம் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் நியமிப்பதில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக கடந்த மூன்று நாள்களாக கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதனால் ஆறாயிரத்திற்கும் (6,000) மேற்பட்ட நெல் மூட்டைகளுடன் விவசாயிகள் இரவு, பகலாக காத்திருந்து வருகின்றனர்.
இந்த கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் 15 பேர் வேலை பார்க்க வேண்டிய இடத்தில் தற்போது 11பேர் மட்டுமே உள்ளனர்.
மீதமுள்ள நான்கு பேர் அதிமுகவினராக நியமிக்க வேண்டும். அதில் வேலை பார்க்கும் 11 பேர் தலா ரூ.15 ஆயிரம் பணம் தர வேண்டும் என்று அதிமுக கிளை செயலாளர் செல்வகுமார் தலைமையில் பிரச்னையில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவர் சதீஷ் ( திமுக), விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்பிற்கு இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த பிரச்னை காரணமாக அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தர் (பி.சி) கடந்த மூன்று நாட்களாக கொள்முதல் நிலையத்தை திறக்கவில்லை.
இந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்ததாலும் காவிரியில் தண்ணீர் வந்ததால் சம்பா சாகுபடி நல்லமுறையில் விளைந்து தற்போது விவசாயிகள் அறுவடையை முழுவீச்சில் செய்து வருகின்றனர். தனியார் நெல் வியாபாரிகள் குறைந்தவிலைக்கு நெல்லை கேட்பதால் விவசாயிகள் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை விவசாயிகள் நாடியுள்ளனர்.
ஆனால் இது போன்ற பிரச்சனையால் நெல்லை போடமுடியாமல் இருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிபக்கழக வட்டாரங்கள், “கடக்கம் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் பிரச்னை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். நாளை முதல் நெல் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: 'தார் சாலை தரமில்லை' - ஒப்பந்ததாரரை சிறைப்பிடித்து மக்கள் போராட்டம்!