மயிலாடுதுறை மாவட்டம் வைத்தியநாதபுரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த தைரியநாதன் என்பவர் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருக்கு அப்பள்ளியின் தலைமையாசிரியர் ரவி என்பவர் அரசு வழங்கக்கூடிய பணப் பயன்கள், மூன்று மாத சம்பளம் ஆகியவற்றை வழங்காமல் இருந்துள்ளார்.
இது குறித்து ஆசிரியர் தைரியநாதன் மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் தெரிவித்தார். இருப்பினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று (நவ. 28) ஆசிரியர் தைரியநாதன் பள்ளி முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட கல்வி அலுவலரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, "தலைமை ஆசிரியர் மீதுள்ள புகார் குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது. ஆசிரியர் தைரியநாதனின் மூன்று மாத சம்பளத்தை உடனடியாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தலைமை ஆசிரியர் அறையில் நடிகர் சிவகுமாரின் புகைப்படம் வைக்கப்பட்டதால் சர்ச்சை...!