ETV Bharat / state

உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; மயிலாடுதுறை விவசாயி மகள் சாதனை

author img

By

Published : Jul 9, 2022, 5:48 PM IST

சென்னையில் ஜூன் 10-ஆம் தேதி நடந்த 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கோல் ஊன்றி உயரம் தாண்டுதலில் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி மகள் பரணிகா அதிக உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; விவசாயி மகள் சாதனை
உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; விவசாயி மகள் சாதனை

மயிலாடுதுறை: தேசிய அளவிலான போல் வால்ட் போட்டியில் அதிக மீட்டர் உயரம் தாண்டி , தங்கம் வென்று புதிய சாதனை படைத்திருக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாயி மகள் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை இங்கு காணலாம்...

உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம்; விவசாயி மகள் சாதனை

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் மாநிலங்களுக்கு இடையிலான 61-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி (இன்டர்-ஸ்டேட் அத்லெட்டிக் நேஷனல் சாம்பியன்ஷிப் 2022) ஜூன் 10-ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில் போல் வால்ட் எனப்படும் கோல் ஊன்றி உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர் , வீராங்கனைகள் பங்கேற்றனர்.

போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா சேத்திரபாலபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி இளங்கோவன் மகள் பரணிகா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். அவர் 4.05 மீட்டர் உயரம் தாண்டி புதிய சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் 2018-ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த கயாத்தி என்ற வீராங்கனை 4 மீட்டர் உயரம் தாண்டியதே சாதனையாக இருந்தது. புதிய சாதனையை படைத்து, சொந்த ஊருக்கு திரும்பிய விளையாட்டு வீராங்கனை பரணிகாவுக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குத்தாலம் பழையகூடலூரில் உள்ள தனியார் (ஜி.எஸ்.கே.) மெட்ரிக் பள்ளியில் படித்த போதே ஓட்டப் பந்தயம், தூரம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை பரணிகா பெற்றுள்ளார்.

பின்னர் சென்னை எத்திராஜ் கல்லூரியில் பி.காம், நுங்கம்பாக்கம் எம்.ஓ.பி வைஷ்ணவ் கல்லூரியில் எம்.காம் பயின்று கொண்டே போல்வால்ட் பயிற்சியாளர் மில்பர் என்பவரிடம் பயிற்சி பெற்ற பரணிகா தற்போது இந்த சாதனையை படைத்துள்ளார். விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகள் காரணமாக இவருக்கு ரயில்வே துறையில் சென்னையில் எழுத்தர் பணி கிடைத்து, அங்கு பணியாற்றி வருகிறார்.

படிப்பு, பணிக்கு இடையில் பொருளாதார நெருக்கடிகளையும் தாண்டி அயராது விளையாட்டிலும் தீவிர பயிற்சி எடுத்து வரும் பரணிகாவின் அடுத்த இலக்கான ஆசிய அளவிலான போட்டியில் தங்கம் வெல்ல வேண்டும் என்ற முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்களுடன் ஈடிவி செய்திகளுக்காக மயிலாடுதுறையில் இருந்து செய்தியாளர் செல்லப்பா.

இதையும் படிங்க: பெரம்பலூரில் 300 ஆண்டுகள் பழமையான நாயக்கர் கால தூம்பு கல்வெட்டு கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.