மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மதிமுக மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாவட்ட செயலாளர் மார்கோனி தலைமையில் நேற்று (ஏப்.23) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய துரை வைகோ, "தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மதநல்லிணக்கம், சமத்துவம், சமுதாய ஒற்றுமை இருக்கிறது. வடக்கில் என்ன நடக்கிறது என்று மக்களுக்குத் தெரியும். மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்ற அடிப்படையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் அல்ல பாஜக ஆளுநர்: தமிழக ஆளுநர் என்று சொல்லக்கூடாது பாஜக ஆளுநர் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் என்றைக்கு பாஜக ஆளுநராக மாறினாரோ அன்றே அவர் தமிழக ஆளுநர் இல்லை என்று மக்கள் முடிவெடுத்துவிட்டனர். அதனால்தான் அவருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின்போது வன்முறை கூடாது. அறவழி போராட்டம்தான் செய்ய வேண்டும்.
மத்திய அரசு ஒதுக்கீடு 800 மெகாவாட் மெகாவாட் மின்சாரம் வராத காரணத்தாலும், நிலக்கரி தட்டுப்பாடு காரணத்தாலும் தமிழ்நாட்டில் மின்தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும், வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது. கோடைகாலத்தில் மின்பயன்பாடு 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இந்த தருணத்தில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மின்வெட்டு ஏற்படுகிறது.
நுழைவுத்தேர்வு கூடாது: தமிழக அரசு தனியாரிடம் இருந்து மின்சாரம் வாங்குவதற்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். நிலக்கரி இறக்குமதி சம்பந்தமாக முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண முடியாது. கோடைகாலங்களில் மின்சார பயன்பாடு அதிகரிக்கும் என்பதை அறிந்தும் மத்திய அரசு எந்தநடவடிக்கையும் எடுக்காததால்தான் இதுபோன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மின்வெட்டுக்கு முக்கிய காரணம் மத்திய அரசு.
நிலக்கரி விலை உலகம் முழுவதும் 300 மடங்கு உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 50 சதவீதம் நிலக்கரியை கொண்டுதான் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மக்கள் விரோத, விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது. அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் ஆசிரியரிடம் தரக்குறைவாக செயல்பட்டது கண்டிக்கத்தக்கது.
உயர்கல்வி படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கொண்டுவந்து மத்திய பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் என்று கூறுகிறது மத்திய அரசு. மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வு ஏழை, கிராமப்புற மாணவர்களின் கல்வியை பாதிக்கும். நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கண்டனம் தெரிவித்து வருகிறோம். பாஜகவின் மக்கள் விரோத பொய்பிரச்சாரத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: ஓரிரு தினங்களில் மின்தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி